அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள்!

Monday, November 27th, 2017

 

வித்தியா என்ற ஒரு நறுமலரை கசக்கி பிழிந்து சாகடித்தவர்களுக்கு இன்று நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதை நான் வரவேற்கிறேன். ஆனாலும்.. குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தவர்களை சட்டம் இன்னும் தண்டிக்கவில்லை. அவர்கள்  இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

அதிகாரத்தில் அவர்களே இருந்து கொண்டு தமது குற்றங்களை மூடி மறைப்பற்காக தமக்கு அதிகாரத்தை வழங்கிய அதே அரசாங்கத்தை பார்த்து இந்த அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று போலி வேஷம் போட்டு போர்க்கொடி தூக்குகிறார்கள்.  அரசாங்கத்தை நோக்கி இவர்கள் சுட்டு விரலை மட்டும் நீட்டுகிறார்கள். ஆனாலும் அதிகாரத்தில் இருக்கும் இவர்களை நோக்கியே ஏனைய நான்கு விரல்களும் நீள்கின்றன .

யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி புங்குடுதீவில் சாரதாம்பாள் கிழக்கில் கோணோஸ்வரி…இவர்கள் எல்லாம் கசக்கி எறியப்பட்டு கொடூரமாக பலி கொல்லப்பட்டார்கள். அதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினோம்.

அம்பலப்படுத்தினோம். முடிந்தளவு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தினோம். அப்போதெல்லாம் வர்கள் எங்கே இருந்தார்கள்?..

சொந்த மண்ணில் எமது மக்கள் சுததிரமாக வாழ உழைத்துக்கொண்டிருந்தார்களா?.. இல்லவே இல்லை. மாறாக தமது சுக போகங்களுக்காக வியாபாரம் மட்டுமே  நடத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும்  ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன்.  சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை விடுதலை என்பது சாத்தியமில்லை என்று பெண்கள் சமூகத்தை நோக்கி முதன் முதலில் அறை கூவல் விடுத்தவர்கள் நாங்கள்.

ஆண்களுக்கு நிகராக பெண்களையும் தமது உரிமைக்காகாக போராட்டக்களத்தில் முதன் முதலில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நாங்கள். அடுப்போடு வாழ்ந்த நெப்புக்கள் நாங்கள்  எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம் என்று உறுதி கொண்டு  எமது பெண்கள் சமூகம் எழுந்து வந்தது வெறும் தேச விடுதலைக்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைக்காகவுமே அவர்கள் எழுச்சியுற்று வந்தார்கள்.

ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்ததிற்கு பின்னர் எமது போராட்டத்தின் வழிமுறையை மாற்றிக்கொண்டவர்கள் நாங்கள். காலம் மாறலாம் சூழல் மாறலாம் அதற்கு இசைவாக போராட்ட வடிவங்களும் மாறலாம்.

ஆனாலும். அன்று நாம் கனவு கண்ட பெண்கள் சமூகத்தின்  இலட்சிய நோக்கு இன்னும் மாறவில்லை. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது  எண்ணங்கள் இன்னம் மாறவில்லை. அரசியல் அதிகாரங்களை பெறுவதின் ஊடாக ஒட்டு மொத்த தமிழ்  பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும்.

பெண்கள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுவிட முடியும் எம்றும்..நம்பிக்கை கொண்டு எமது உரிமை நோக்கிய பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். அவர்களுக்கான சமூக ஒடுக்குமுறைகள் உடைக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமவுரிமை காணப்பட வேண்டும். பெண்கள் சமூகம் சுமக்கும் குடும்ப சுமைகளில் இருந்து விடுபட வேண்டும்.தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு 25 வீதத்திற்கு அப்பால் சென்று ஐம்பதிற்கு ஐம்பதிற்கு வீதம் பெண்களின் உறுப்புரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரம் வளம்பெற வேண்டும்.

அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே  அதிக பட்ச தண்டனைக்குரிய குற்றவாளிகள் என தெரிவித்தார்.

Untitled-2 copy

Related posts:


தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை...
யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...
நிரந்தர தீர்வை காண்போம்: என்டனுடன் அணிதிரண்டு வாருங்கள் - குடாநாட்டு மக்களுக்கு டக்ளஸ் எம்.பி. அழைப...