அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
Wednesday, September 5th, 2018கடந்த ஜூன் மாதம் தபால் பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் மேற்படி பணிப் பகிஸ்கரிப்பால் மூன்று நாட்களில் மாத்திரம் 500 மில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமேற்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் கூறியிருந்தார். தபால் திணைக்களத்தின் நாளாந்த வருமானம் சுமார் 150 முதல் 180 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்திருந்தார். கடுகதி தபால் சேவை மூலமாக கடந்த ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இத்துறையினை மேலும் வருமானம் ஈட்டும் துறையாக ஏன் மாற்றியமைக்க முடியாது? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –
2006ஆம் ஆண்டின் சேவை வழங்கும் திணைக்களத்திற்கென வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. பதில் தபாலதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இவற்றைத் தீர்ப்பதில் இருக்கின்ற தடைகள் என்ன? என்பது குறித்து தபால் சேவைகள் அமைச்சர் அவர்கள் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அண்மையில் நடந்திருந்த தபால் பணியாளர்களது பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக வெளிநாட்டு தபால் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக சர்வதேச தபால் சங்கப் பட்டியலில் இருந்து இலங்கை தபால் சேவையானது நீக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டது. எனவே உரிய ஏற்பாடுகளை எந்த விடயங்கள் சார்ந்தும் உரிய காலத்திற்குள் எடுக்காமல் சர்வதேச ரீதியிலும் அபகீர்த்திகளைத் தேடிக் கொள்வதே இந்த நாட்டுக்கு வழமையாகி விட்டது என்றே கருத வேண்டியிருக்கின்றது.
Related posts:
|
|