அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Tuesday, December 6th, 2022

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர,  இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.

இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: