அரநாயக்க பேரவலம்: தகவல்களில் குழப்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/valim01.jpg)
கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருப்பதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரநாயக்க மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரை 17 பேரது சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு மேலும் 132 பேர் புதைந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கையை விடவும் அதிகளவில் அங்கு மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்ற தகவலை ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் தொடர் மழை மற்றும் மண்மேடு சரிவு காரணமாக அரநாயக்கவில் மீட்புப் பணிகள் சற்று மெதுவாகவே இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மீரியாபெத்த கொஸ்லந்த மண்சரிவின்போது அரசாங்கம் வெளியிட்ட பலி எண்ணிக்கையை சவாலுக்கு உட்படுத்திய சில அமைப்புகள் அங்கு அதை விடவும் அதிகளவானோர் பலியாகியிருப்பதாக கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை அரநாயக்க மண்சரிவு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
இந்த முகாம்களில் வெள்ளிக்கிழமை மாலை வரை மூவாயிரத்து 114 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால மக்களின் நலனில் மிக அவதானத்துடன் செயற்படும்படியாக அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|