சீனாவுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமெரிக்காவுடன் ஆலோசனை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தை அவர் நிராகரித்துள்ளார்.

சீனர்களுக்கு துறைமுகம் சொந்தமில்லை. துறைமுகம் இலங்கையிடமே உள்ளது, ஆனால் துறைமுகத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீன வணிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக அதிகார சபையால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதே இதற்கான காரணமாகும்.

சீனாவை தவிர, துறைமுகத்தை கையேற்க யாரும் இல்லை. எனவே அதை மூடுவதே தமது மற்றுமொரு தெரிவாக இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்தநிலையில் துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் நோக்கில், இலங்கை கடற்படையின் தெற்கு கட்டளை பிரிவு ஹம்பாந்தோட்டையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல அமெரிக்க மற்றும் ஜப்பானிய போர்க் கப்பல்கள் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. துறைமுகத்திற்கு அடிப்படை இராணுவ மதிப்பு இல்லை. சீனர்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தமாட்டார்கள்.

அவர்களால் முடியாது. இதேவேளை துறைமுகம் மற்றும் சீனர்களுடனான பரிவர்த்தனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சூம் தொழில்நுட்பத்தினூடாக ஏற்பாடு செய்த நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: