வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/48421477_2162512747410487_5949142120051769344_n-1.jpg)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற்கொண்டு விரைவான நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வடக்கில் பெய்த கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டமும் பெரும் அழிவை சந்தித்திருந்தது. குறிப்பாக முத்தையன்கட்டு குளம் உள்ளிட்ட குளங்கள் வான் பாய்ந்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உடனடியானதும் நீண்டகால தேவைகளை கருத்திற்கொண்டு மக்களுக்கு விரைவான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
பாதிக்கப்பட்ட நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டாலும் கூட உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே அவற்றை இனங்கண்டு உரிய முறையில் அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். குறிப்பாக இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கிணறுகள் பலவும் பாதிப்படைந்துள்ளன.
எனவே அவற்றை திருத்தி அமைப்பதுடன் மக்களின் பாவனைக்கு ஏற்ற வகையில், அவை உரிய முறையில் புனரமைப்பு செய்யப்பட வேண்டியதும் அவசியமானது. அதுமாத்திரமன்று அடுத்த மாதம் முற்பகுதியில் பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படுகின்ற போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புக்களின் போது தமது சீருடைகளை மட்டுமல்லாது பாட புத்தகங்களையும் மாணவர்கள் வெள்ளத்தில் இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே அவற்றை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்று இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள அதேவேளை அவர்களுக்கான உதவித் திட்டங்களும் அவசரமாக தேவைப்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் இன்னல் படும் இந்த மக்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஊடாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|