அழிவுக்கு வழி காட்டியவர்கள் ஊடக சுதந்திரம் பேசுவதா?
Thursday, May 4th, 2017யாழ்ப்பாணத்தில் “சப்றா” எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 1970ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து அதன் மூலமாக அதி கூடிய வட்டி தருவதாக விளம்பரம் செய்து, எமது மக்களின் கோடிக்கணக்கான நிதியை திரட்டிய பின்னர் அந்த நிதியை எமது மக்களுக்கு கொடுக்காமல் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் இன்று ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசுவதற்கு தனக்குத் தகுதி இருப்பதாக கூறியிருக்கின்றார் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று (04.05.2017) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தது தொடர்பாக கருத்துக் கூறிய செயலாளர் நாயகம் அவர்கள்,நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஊடக சுதந்திரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கே தான் அவ்வாறு பதிலளித்ததாகக் கூறியதுடன்,“சப்றா” மோசடி நிதி நிறுவனத்தை திட்டமிட்டு ஆரம்பித்து அதன் மூலமாக யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான நிதியை கொள்ளையடித்துவிட்டு, அந்தப் பணத்தில் பத்திரிகையைத் தொடங்கிய இவர்,அந்த ஊடக நிறுவனம் லாபம் ஈட்டுகின்றபோதும் அங்கு பணிபுரியும் சிற்றூழியர்களுக்கு சேம லாப நிதியைச் செலுத்தாமல் இருப்பதையும்,விளம்பரம் ஊடாகக் கிடைக்கும் பணத்துக்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்வதையும் வசதியாக மறந்துவிட்டு உரையாற்றுகின்றார்.
அரசுகளுக்கு தலையையும், புலிகளுக்கு வாலையும் காட்டிக்கொண்டு பத்திரிகை நடத்தி எமது மக்களுக்கு அழிவுக்கு வழிகாட்டிய இவர்களைப் போன்றவர்களுக்கு ஊடக தர்மம் தொடர்பாகவும், ஊடக சுதந்திரம் தொடர்பாகவும் கதைப்பதற்கு எவ்விதமான அருகதையும் இல்லை.கைக்கூலிகளை வைத்து தனது காரியாலயத்தை பகுதி அளவில் தாக்கிவிட்டு, தாக்குதலுக்கு உள்ளான பிரதேசத்தை கண்காட்சிப் படுத்திக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்களுக்கு அதைக்காட்டி முதலைக்கண்ணீர் வடித்து நாடகமாடி அனுதாபம் தேடி வயிறு வளர்க்கும் இவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லை.
“சப்றா” மோசடி நிதி நிறுவனத்தில் தமது சேமிப்பை பறிகொடுத்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும்,திருமணத்திற்காக சேமித்த பணம் பறிபோனதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் முதிர்க் கன்னிகளாக இருப்பர்களுக்கும் இந்த மோசடிப் பேர்வழிகள் பதில் கூறவேண்டும்.மோசடிகளையும். நம்பிக்கைத் துரோகத்தையும் செய்த பாவிகள்,“சாத்தான் வேதம் ஓதுவதுபோல்” இன்று தமிழ் மக்களுக்காகவே தாம் அரசியல் செய்வதாகக் கூறுவது தமிழ்மக்களிடையே கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்னார்.
Related posts:
|
|