NPPயின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம்!

Sunday, May 10th, 2026




யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினம் நிகழ்வில் கலந்துகொள்ளாத கடற்றொழிலாளர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை கடற்றொழிலாளர் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


யாழ்ப்பாணம் –  பருத்தித்துறை நகர் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை கொட்டடி கடல் தொழிலாளர் சங்கம் அறிவுறுத்தியிருந்தது.


சங்கத்தின் அறிவுறுத்தலை மீறி, குறித்த மே தினக் கூட்டத்தில் சுமார் 60 கடற்றொழிலாளர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கூட்டத்திற்குச் செல்லாத உறுப்பினர்களுக்கு தலா 3,000ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு கடற்றொழிலாளர் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.


இந்த விவகாரம் பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர் சங்கங்களை ஓர் அரசியல் கட்சியின் தேவைக்காகப் பயன்படுத்துவது மற்றும் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும், தற்போதைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் கடற்றொழிலாளர்கள் மீது இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அநீதியானது என சங்கத்தினர் மீது பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.


சுயாதீனமாக இயங்க வேண்டிய கடற்றொழிலாளர்  சங்கங்களை தேசிய மக்கள் மயப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதாகச் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்தச் சம்பவம் பருத்தித்துறை கடற்றொழில் கிராமங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், கட்டாய அரசியல் பங்கேற்பு குறித்த விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நகர் கடற்றொழிலாளர்கள் சங்க செயலாளரிடம் வினவிய போது, தமது சங்கத்தின் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் தமது சங்கத்திற்கு கூட்டங்களுக்கு வறுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு 3000 தண்டப்பணம் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

000

Related posts: