தகுதியறிந்து வேட்புமனு வழங்கப்பட வேண்டும் –  மார்ச் 12 அமைப்பு வலியுறுத்து!

Tuesday, October 8th, 2024

பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்ச் 12 அமைப்பு அனைத்து அரசியல் கட்சி, சுயாதீன குழுக்களுக்கு அறிவித்துள்ளது.

தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் சந்தேகத்திற்கு, அதிருப்திக்கு மற்றும் பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் அனைவரும் மார்ச் 12 அமைப்பு உருவாக்கிய 8 வகைப்படுத்தல்களுக்கு இணக்கம் தெரிவித்து கையொப்பமிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, குற்றச்செயல் ஒன்றுக்கு குற்றவாளியாகாத, ஊழல் அல்லது மோசடியில்லாத சமூக விரோதிகள் அல்லாத அவசியமற்ற நிதி ஒப்பந்தங்கள் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வேட்பாளர்களாகும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என எடுத்துக்காட்டியுள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத்திற்கு பிரநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்த தேர்தலுக்காக வேட்புமனுக்களை வழங்கும் போது மார்ச் 12 அமைப்பின் வகைப்படுத்தல்களுக்கு உடன்பட வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை என கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமைகளான சட்டம், பொது நிதி மேலாண்மை, கொள்கை உருவாக்கம் ஆகிய கடமைகளை பொறுப்பேற்க உள்ள ஆளுமை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 12 அமைப்பின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்

000

Related posts: