மேலும் 100 மாணவர்களுக்கு மருத்துவ பீடத்திற்கு சந்தர்ப்பம்!

Monday, June 12th, 2017

2016 – 2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக மருத்துவக் கல்வியைத் தொடர்வோரில் மேலும் 100 பேருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கமைவாக வைத்திய பீடத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1440 ஆக அதிகரிக்கப்படும் என்று  பல்கலைக்கழக மானியங்கள் பேராசிரியர் மொஹான் டி சில்வா  தெரிவித்தார்.கடந்த வருடத்தில் வைத்திய பீடத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 1340  என்றும்  ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

அரச பல்கலைக்கழகங்களில் வைத்திய பீடங்களுக்கு 50 மாணவர்களும், கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்திற்கும், 50 மாணவர்களும் இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதிலும் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே இடம்பெறும். ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்று வைத்திய பீடங்களுக்கு அனுமதி பெற முடியாத மாணவர்கள் தாதியர்களுக்கான சந்தர்ப்பமாகும் என்றும் அவர் கூறினார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் புதிதாக வைத்திய பீடம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்.

வயம்ப பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்படும் வைத்திய பீடத்திற்கு 100 மாணவர்கள் அடுத்த வருடம் முதல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள வைத்திய பீடத்திற்கு 2019ம் ஆண்டிலிருந்து 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2016-2017 கல்வி வருடத்திற்காக பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்திற்கு மேற்பட்டதாகும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா மேலும்   தெரிவித்தார்.

Related posts: