செம்மணி விவகாரம் – AI தொழிநுட்ப பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை!

Tuesday, July 1st, 2025

செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு புகைப்படங்களை Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கையில், “அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு தொகுதிகளுக்கு மாற்றீடான புகைப்படங்களை பரப்புவது தொடர்பாக கூறியாக வேண்டும்.

இந்த புதைகுழி தொடர்பான வழக்கு குற்றவியல் விசாரணைகளுடன் தொடர்ந்து இடம்பெற்று வரும் வழக்காகும். எனவே அதன் விசாரணை நடவடிக்கைகளில் இருக்கிற பொருட்கள், சான்று பொருட்களாகவே கொண்டு விசாரணகள் இடம்பெற்றுவரும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், பாதிக்கப்பட்டவர் தொடர்பான ஒரு உண்மை தன்மை, சுய அடையாளங்களை தேடுதலின் அடிப்படையில் பேணி பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

அவ்வாறு இருக்கையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தவறான விடயமாகும். இவ்வாறான போலியான தகவல்கள் சமூக தளங்களை போய் சேரும்போது எதிர்காலத்தில் குற்றவியல் விசாரணைகளுக்கு தடையாக அமையலாம்.

எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த வழக்கை திசை திருப்புவதற்கான ஒரு யுக்தியாகவே பாதிக்கப்பட்டவர்கள் இதனை பார்க்கிறார்கள்.

அந்த அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடியதன் படி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு விடயம் தொடர்பில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதி அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.

அத்தோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று கூறி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இருக்கின்றன.

எனவே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செம்மணி தொடர்பான புகைப்படங்களை பகிர்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் எதிர்காலத்தில் தொடர்ந்து இதுப்போன்ற நடவடிகைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

000

Related posts: