உடல்நிலை தற்போது சற்று பலவீனமாக உள்ளது – எம்.எஸ்.தோனியின் கருத்தால் ரசிகர் அதிர்ச்சி!
Tuesday, May 19th, 2026
…
ஐந்து முறை சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய போதிலும், சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கூடியிருந்த ரசிகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான தருணம் காத்திருந்தது.
காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடாத எம்.எஸ்.தோனி, நடப்புப் பருவத்தில் சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடிய இறுதிப் போட்டி இது என்பதால் மைதானத்திற்குள் வருகை தந்தார்.
போட்டிக்குப் பின்னர் மைதானத்தை வலம்வந்து ரசிகர்களுக்கு அவர் நன்றியையும் செலுத்தினார்.
இதன்போது, அங்கு வர்ணனையாளராக இருந்த தனது முன்னாள் சக வீரர் சுரேஷ் ரெய்னாவை தோனி சந்தித்துக் கலந்துரையாடினார்.
இது குறித்து ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த ரெய்னா,
“நான் தோனியிடம், ‘நீங்கள் இந்த ஐபிஎல் தொடரைத் தவறவிட்டுவிட்டீர்கள். அடுத்த வருடம் நிச்சயமாக விளையாட வேண்டும்’ எனக் கூறினேன்.
அதற்கு அவர், ‘எனது உடல்நிலை தற்போது சற்று பலவீனமாக உள்ளது’ எனக் குறிப்பிட்டார். ஆனால் நான், “நாங்கள் எதையும் நம்பத் தயாராக இல்லை, நீங்கள் அடுத்த வருடம் விளையாடியே தீர வேண்டும்’ என்று கூறினேன். எவ்வாறாயினும், இது அவரது தனிப்பட்ட முடிவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை முன்னரைப் போல ஒத்துழைக்காததால், அடுத்த வருடம் விளையாடுவது கடினம் என்பதை தோனி இதன்மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தோனியின் எதிர்காலம் குறித்து சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேட்டபோது, இது நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு. தோனி இந்த வருடம் விளையாடாவிட்டாலும், இளம் வீரர்களின் வளர்ச்சிக்கும் அணியின் முன்னேற்றத்திற்கும் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


