இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!

Tuesday, August 5th, 2025

இந்தியா – இலங்கைக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த மனுக்கள் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில்  இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது

தேசபக்த தேசிய இயக்கத்தின் தலைவர் டொக்டர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுவில் சட்டமா அதிபர், பிரதமர்  ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்று மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இது அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அதில் கையெழுத்திடுவது சட்ட மீறலாகும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடிப்படை உரிமைகளை மீறியதற்காக   02 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்

000

Related posts: