இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு – ஒரு வயதை அடைவதற்கு முன்னரே 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!
Saturday, February 1st, 2025
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை.
ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நாட்டில் கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்ப பகுதியில் கரு கலைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மை, வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்களின் வயதெல்லை 73 ஆகவும் பெண்களின் வயதெல்லை 80 ஆகவும் உயர்வடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


