வட பிராந்திய சாலை நிர்வாகத்தில் பாரிய முறைகேடு – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Wednesday, December 12th, 2018

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது.

இ.போ.ச வட பிராந்திய சாலையின் நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் நடைபெறுகின்ற அதே வேளையில் தொடர்ந்தும் நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன. தங்களது பதவிகளுக்காகவும் மற்றும் சலுகைகளுக்காகவும் தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் சீர்கேடுகள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பில் குரல் கொடுக்கின்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீதும் பொய்க்குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

இதனால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு  பெரும் கஷ்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதிகாரிகளின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம்.

அத்தோடு வட பிராந்திய நிர்வாகச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மேற்படி சங்கத்தினர் இதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயினும் இதற்குரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படாதவிடத்து தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்படி சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: