காவு வண்டியை நாடுவதில் காணப்படும் சிரமங்களே வீடுகளில் கொரோனா மரணங்கள் சம்பவிக்க பிரதான காரணம் – சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021

தற்போதைய முடக்கல் நிலையில் நோயாளர் காவு வண்டியை நாடுவதில் காணப்படும் சிரமங்களே வீடுகளில் கொரோனா மரணங்கள் சம்பவிக்க பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஏற்படும் கோவிட் இறப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இறக்கும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அனைத்து கோவிட் இறப்புகளில் 19.5 வீதமானவை வீட்டிலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பும் பதிவாகின்றன.

செப்டெம்பர் 3 ஆம் திகதி நிலவரப்படி ஆயிரத்து 339 கோவிட் நோயாளர்கள் தங்கள் வீடுகளில் இறந்துள்ளனர், மேலும் 573 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான இறப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. முடக்கலின் போது நோயாளர்காவு வண்டிகளை கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருக்கலாம். இதுவே வீட்டில் சம்பவிக்கும் இறப்புகளுக்கு பிரதான காரணம்.

எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இறப்பதைத் தடுக்க உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மாற்றுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: