சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு மனநல சான்றிதழ் அவசியம்!
Wednesday, September 27th, 2017
சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் இனிமேல் மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழையும் கட்டாயம் வழங்க வேண்டும் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
தற்போது சாரதி விண்ணப்பப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உடல் ஆரோக்கியம் சம்பந்தமான மருத்துவச் சான்றிதழ் மட்டும் போதுமானதாக உள்ளது.
இந் நிலையில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்பதால் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதா கொட தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் விரைவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைச் சமர்ப்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் மோட்டார் வாகன திருத்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வோர் மனநலம் தொடர்பான மருத்துவ சான்றிதழ் வழங்குவது கட்டாயம் எனவும் மேற்படி மனநல மருத்துவ சான்றிதழ் வழங்காத சாரதிகளுக்கு இனிமேல் சாரதி விண்ணப்பப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


