சமுர்த்தியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி!

Saturday, August 12th, 2017

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொவித்துள்ளார்.

சமுர்த்தி நன்மைகளை பெறத் தகுதியுடைய பெருந்தொகையானோர் நாட்டில் இருப்பதுடன், அவர்களுக்கு புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதனை தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கனவே நன்மைகளை பெறுபவர்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் நீக்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.சமுர்த்தி நன்மைகளை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் பிசாரங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி;, பொதுமக்களின் நன்மைகளை கருதியே தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளுமென தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி , விவசாய மக்கள் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்கும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக விவசாய துறையில் புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் தெரிவித்தார்.உள்நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்து அதனூடாக தேசிய பொருளாதாரத்தையும், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , எமது நாட்டின் விவசாயத்துறையில் புத்தாக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்கள் ஆர்வங்கொள்ளக்கூடிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி , அவற்றை எந்தவித தாமதங்களும் இன்றி நிறைவேற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின்  பொறுப்பாகும் என்பதுடன், இவ்விடயத்தில் அரசியல் மற்றும் கட்சி பேதங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்திற்கொண்டு செயற்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

வரலாற்றில் உலகம் பூராகவும் மக்கள் தமது காணி உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டே பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து இலங்கையர்களுக்கும் தங்களுக்கென்று காணி மற்றும் வீட்டின் உரிமையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றதெனவும் தெரிவித்தார்

Related posts: