விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
Wednesday, September 7th, 2016
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், இவர்களது வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த அரசு யுத்தத்தை வெற்றி கண்ட போதிலும், தமிழ் மக்களின் மனங்களை போதியளவு வெல்ல தவறிவிட்டதென்பதை உணர்ந்து, தற்போதைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான விடயங்கள் பல இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக, வேலையில்லாப் பிரச்சினையானது வடக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், பட்டதாரிகள், க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் செல்ல இயலாதோர், புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் ஏனைய உரிய வேலைவாய்ப்பற்றோர் என பல்வேறு தரப்பினர் வேலையில்லாப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம், தமிழ் மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்திற்கு புறம்பாக உணர்வு ரீதியில் திணிக்கப்பட்டிருக்கும் பல்வேறு எண்ணப்பாடுகளையும் அகற்ற வேண்டியுள்ளது. வடக்கு மாகாணத்தில் தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கை போதியளவில் இல்லை என்பதும், இலங்கையின் முப்படைகளையும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் ‘சிங்களப் படைகள்” என்று கருதப்படக்கூடிய நிலையே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த நிலைப்பாடுகளை அகற்றி, தேசிய நல்லிணக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், வேலையில்லாப் பிரச்சினையை ஓரளவு தீர்க்கும் வகையிலும் முப்படைகளிலும், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களங்களிலும் விகிதாசார அடிப்படையில் எமது இளைஞர், யுவதிகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|