போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016

இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விதிக்கப்படுகின்ற அபராதங்களின் தொகை அதிகரிக்கப்பட்ட விடயமே காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் நாளாந்தம் பல கருத்துக்கள் எதிராகவும், சார்பாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்றைய குழு நிலை விவாதத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எனது கருத்துக்களை இங்கு தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விதிக்கப்படுகின்ற அபராதங்களின் தொகை அதிகரிக்கப்பட்ட விடயமே காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் நாளாந்தம் பல கருத்துக்கள் எதிராகவும், சார்பாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனவே, இது தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும். வீதிப் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்கள் காரணமாகச்  சுமார் 2,300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. கடந்த வருடம் இதே விபத்துகள் காரணமாக சுமார் 2,500 பேர் வரையில்  உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

அபராதத் தொகைகளை மாத்திரம் அதிகரிப்பதன் மூலம் இந்த விபத்துக்களைத் தடுக்க முடியும் என எதிர்பார்த்து, இந்த அபராதத் தொகையினை அதிகரிக்கின்ற நிலையில் இதனால் அந்த இலக்கை அடைய முடியுமா என்பது குறித்து ஒரு மீள் பரிசீலனை செய்து, பின்னர் இது தொடர்பில் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்க முடியுமென நான் நம்புகின்றேன்.

அதே நேரம், இலங்கையில் புகையிரத நிலையங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன.

இந்த நிலையில், ஒரு புகையிரதம் புறப்படும் நேரம், எங்கு செல்லும் புகையிரதம் எந்த மேடையில் தரித்திருக்கிறது, வெளியிடங்களிலிருந்து குறித்த புகையிரத நிலையத்திற்கு வந்து சேரும் புகையிரதம் எந்தப் புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டது, அது எத்தனையாம் மேடைக்கு என்ன நேரத்திற்கு வரும், தாமதாமாகப் பறப்படும் மற்றும் தாமதமாக வந்தடையும் புகையிரதங்களின் விபரங்கள்

போன்ற விபரங்களை பயணிகளும், பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும் என்றே கருதுகின்றேன். இந்த வகையில் பார்க்கும்போது, நாட்டின் பிரதான புகையிரத நிலையமான கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் முதற் கொண்டு, பல புகையிரத நிலையங்களில் தமிழ்மொழி மூலமான அறிவிப்புகள் போதியளவில் இல்லை என்பதும், பல இடங்களில் அறவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், தமிழ்மொழி மாத்திரம் தெரிந்த பல பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், இவ்விடயம் தொடர்பில் கௌரவ போக்குவரத்து அமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இதே நேரம், இன்றைய நிலையில் புகையிரதத் திணைக்களத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற வடக்கு மாகாணத்திற்குரிய சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சாதாரண புகையிரதங்களில் மிகவும் பழமையான பெட்டிகளே அதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. சுத்தம் என்பதையே இதில் காண முடிவதில்லை. நுளம்புத் தொல்லைகளும், மூட்டைப் பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரித்து அவற்றில் பயணம் செய்யவே இயலாதுள்ளதாக பல பயணிகள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.

இது குறித்த உடனடியாக ஆராய்ந்து அந்தப் பயணிகளுக்குப் போதுமான வசதிகளை மேற்கொள்வதற்கும்,  இம்முறை வடக்கிற்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், பளையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு நகரப் புகையிரத சேவை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் போதியளவு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், அந்த சேவை பயணிகள் குறைவு காரணமாக இடை நிறுத்தப்பட்டது. எனினும், அச் சேவை நடத்தப்பட்டபோது, அதன் மூலம் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் என்போர் அதிகப் பயனை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த சேவையின் தேவை எமது மக்களிடையே உணரப்பட்டு வருகின்ற நிலையில், அதனை மீள, கிளிநொச்சிக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன். இவ்வாறான ஒரு சேவை ஏற்கனவே ஆரம்ப காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது தொடர்பில் ஆராய்ந்துபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கும்,

கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், இலங்கை முழுவதுமாக 687 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இருப்பதாக அறிகின்றேன். இந்தப் புகையிரதக் கடவைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தங்களது தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகளை முன்வைத்து கடந்த காலத்தில் பல தடவைகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையில், ஒரு சில புகையிரதக் கடவைகளில் விபத்துகளும் ஏற்பட்டு ஒரு சிலர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம்.

அந்த வகையில் இந்தப் பணியாளர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதே நேரம், நாட்டில் – குறிப்பாக வடக்கில் பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தப் பாதுகாப்பற்ற கடவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து அமைச்சு இப்போதாவது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது பற்றியும், அறிய விரும்புகின்றேன்.அடுத்ததாக, வடக்கு மாகாணத்திலுள்ள பேரூந்து சாலைகளில் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் நிலவுகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாண சாலையை எடுத்துக் கொண்டால் நிரந்தரமாக ஒரு முகாமையாளர் நியமிக்கப்பட வேண்டும்.

புதிதாக 30 சாரதிகள் மற்றும் 30 காப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். பதில் கடமை அடிப்படையில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில், புதிதாக மேலும் 10 போரூந்துகளாவது தேவைப்படுகின்றன. யாழ் சாலைக்குள் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. மேலும், நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவது தொடர்பில் அவதானம் எடுக்கப்பட வேண்டும்.

பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் காரைநகர் போன்ற ஏனைய சாலைகளுக்கும் தலா 5 புதிய பேரூந்துகள் வீதம் தேவைப்படுவதுடன், தலா 10 சாரதிகள் 10 காப்பாளர்கள் வீதமும் தேவைப்படுகின்றனர்.அத்துடன், யாழ்ப்பாண சாலையில் நிலவும் ஏனைய தேவைகள் மற்றும் பிரச்சினைகளே வடக்கு பிராந்தியத்தின் ஏனைய சாலைகளிலும் காணப்படுகின்றன.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அடுத்ததாக, பலாலி விமான நிலையம் தொடர்பாக ஒரு விளக்கத்தைக் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களிடம் கேட்கலாம் என நினைக்கின்றேன். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எமது மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக் காணிகள், விவசாயக் காணிகள், மீன்பிடித் துறைமுகங்கள் அடங்கலான வளமான கடற்கரைப்பகுதிகள் என்பன  பலாலி விமான நிலையப் பகுதியில் இருக்கின்ற நிலையில், அவை இதுவரையில் எமது மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகளுக்காக அந்தக் காணிகள் சுவீகரிக்கப்படுமென முன்பு ஒரு செய்தி வந்திருந்த நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு பொது மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கென எமது மக்களின் காணிகளில் 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும் என்றும் கடந்த 19ம் திகதி ஊடகங்களில் செய்திகள் கூறுகின்றன.

எனவே. இதன் உண்மை நிலை என்ன என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2010 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 2012.05.20 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்...
வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...