உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 25th, 2017

இன்றைய தினம் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, எனது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது வெளிநாட்டுக் கொள்கை என்பது ஆரம்ப காலந்தொட்டே – அதாவது எமது நாடு சுதந்திரமடைந்த காலந்தொட்டே நிரந்தரமானதொரு கொள்கையாக இன்மையானது, பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகியுள்ளதையே காணக்கூடியதாக உள்ளது.

நாட்டில் மாறி, மாறி வருகின்ற அரசுகள் தங்களது அரசியல் கட்சித் தேவைகள் கருதிய கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்து வந்துள்ளனவே தவிர, எமது நாட்டுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை நிரந்தரமாக வகுத்து, அதனை செயற்படுத்துவதற்குத் தவறிவிட்டுள்ளன.

தலைவலிக்கு உரிய சிகிச்சை அன்றி, அடிக்கடி தலையணைகளை மாற்றிக் கொள்வதாகவே எமது வெளிநாட்டுக் கொள்கையும் இருந்து வருகின்றது.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டங்களில் எமது வெளியுறத் தொடர்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட போதிலும், அதனை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பக்கூடிய சூழல் தற்போது போதுமானளவு உருவாகியுள்ள நிலையிலும், எமது வெளியுறவுக் கொள்கையை மேலும் வலுமிக்கதாகக் கட்டியெழுப்புக்கூடிய சாதகமான வாய்ப்புகள் தட்டிக் கழிக்கப்படுமானால், பின்னர் அதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படாமலும் போய்விடலாம்.

இதற்காக சர்வதேசம் சொல்லுவதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டும் என்பதல்ல. நாங்கள் செய்ய வேண்டியதை நாங்களே செய்தால் போதுமானது.

அந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் யுத்தத்தின் நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டோர் ஆற்றுப்படுத்தப்படல் முக்கியமானது. எனினும், அது நடந்தேறாத நிலையில் அதன் வடுக்கள் வலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வலியினை எமது மக்கள் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர்.

யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறுகின்றார்கள். இந்த நிகழ்வு வடக்கிலும், தெற்கிலும் சில அரசியல்வாதிகளின் சுயலாபம் கருதி அரசியலாக்கப்படுகின்றது. இது, அரசியல் மேடை அல்ல. உறவுகளைப் பலிகொடுத்த எமது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற, கல்லறைகள் தவிர்ந்த ஒரு வெற்று வெளி. வெறுமை. அந்த மக்களுக்கு எதுவுமற்ற வெறுமை. அந்த வெற்று வெளியில் எமது மக்கள் தங்களது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தும் படியும், பொது நினைவுத்தூபி ஒன்றை அமைக்கும்படியும் நான் இந்தச் சபையிலே தனிநபர் பிரேரணையொன்று கொண்டு வந்திருந்தேன். அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. அந்த அங்கீகாரம், செயல்வடிவம் பெறும் வரையில் எமது மக்களுக்கு தங்களது உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இடம்கொடுங்கள். அதற்கு எவரும் தடையாகவோ இடையூறாகவோ இருக்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய விடயங்களை மேற்கொள்வதில் தடைகள் இருக்கக்கூடாது. அதற்கான வழிகளில் திறந்துவிடப்பட வேண்டும். இதன் மூலமும் சர்வதேசத்தில் எமது நாடு குறித்து இருக்கின்ற கறைகள் நீங்கும்.

மேலும், சர்வதேச அரசியலில் நிகழ்கின்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் அடிப்படை தந்திரோபாயங்களை கிரகித்துக் கொள்ள இயலுமான வெளிநாட்டுக் கொள்கை ஒனறின் அவசியத்திற்கான இடைவெளி இன்னும் எமது நாட்டில் நிரப்பப்படாமலேயே உள்ளது.

மேலும், எமது அரசுகள் பல்வேறு நாடுகளுடன் உறுதிபடுத்திக் கொள்கின்ற உறவுகளைப் போன்றே இந்தியாவுடனான உறவுகளையும் பலப்படுத்திக் கொள்கின்றனவே அன்றி, எமது மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கின்ற, கலாசார, பண்பாட்டு ரீதியில் அதிகளிவிலான உறவுகள் கொண்ட, தமிழ் நாட்டுடன் எவ்விதமான உறவுகளையும் பேணுவதாக இல்லை. இதை நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கின்றேன்.

எமது நாட்டில் தென்பகுதியில் இருக்கின்ற சிலர், வடக்கு மீது வைத்திருக்கின்ற பார்வையிலேயே அரசாங்கங்கள் தமிழ் நாட்டினையும் பார்க்காது, தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பேணிப் பலப்படுத்திக் கொள்வதால், எமது நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கக்கூடும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

குறிப்பாக, வர்த்தக ரீதியில் எடுத்துக் கொண்டாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய விவசாய உபகரணங்கள், மின்னியல், இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை மிகவும் குறைந்த விலையிலும், தரமானதாகவும,; இலகுவாகவும் இறக்குமதி செய்ய முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை யாழ் குடாநாட்டின் மூலமாக – காங்கேசன்துறை துறைமுகத்தின் மூலமாகப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுமானால், எமது மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தற்போது பாரிய வீழ்ச்சி நிலையை நோக்கிச் செல்கின்ற எமது வர்த்தகத்துறையை மீளக் கட்டியழுப்புவதற்கும் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

அதேநேரம், எமது நாட்டுக்கு பெரும் தலையிடியாக இருக்கின்ற இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் செயற்பாடுகளை புரிந்துணர்வு அடிப்படையில், நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

தமிழ்நாட்டு அரசத் தலைவர்களையும், அமைச்சர்களையும் உத்தியோகப்பூர்வமாக எமது நாட்டுக்கு வரவழைத்தும், எமது நாட்டு அரசின் தலைவர்கள், அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொண்டும், உறவுகளை கட்டியெழுப்பி, பேணி வளர்த்து, சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் இத்தகைய நிலைமைகள் நிச்சயமாக சாத்தியமாகக் கூடும் என்றே நான் நம்புகின்றேன்.

அதே நேரம், எமது வெளிநாட்டு இராஜதந்திரத் துறையில் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றதென்றே எண்ணுகின்றேன்.

அந்தவகையில், எமது நாட்டின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, குறுகிய கால, மத்தியக் கால மற்றும் நீண்ட கால திட்டமிடப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை ஒன்றினை, அரச நிதி தந்திரோபாயங்கள் மற்றும் தூர நோக்குடன் ஆழமாக ஆராய்ந்து, அதற்கான தகுந்த செயற்பாட்டினை, தகுதிவாய்ந்த இராஜதந்திரிகளைக் கொண்டு செயற்படுத்தப்படல் வேண்டும். இதைவிடுத்து, உறவுகளுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும், நெறுங்கிய நட்புகளுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற நிறுவனமாக வெளிநாட்டு உறவுகள் தொடர்பான கட்டமைப்பு இருக்கக்கூடாது.

இன்று இந்த நாட்டின் பல பகுதிகள் பல்வேறு நாடுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுவதிலிருந்தே எமது நாட்டுக்கு தெளிவானதொரு வெளிநாட்டுக் கொள்கை இல்லை என்பது தெளிவாகின்றது. எமது மக்கள் எமது நாட்டினை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை. அனைத்து நாடுகளுடன் சுமுகமான உறவுகளைப் பேணவே விரும்புகின்றார்கள். இதனை உறுதி செய்கின்ற வகையிலான வெளிநாட்டுக் கொள்கை அமையப்பெற வேண்டும்.

எனவே, நிலையானதும், வலுமிக்கதானதும், எமது நாட்டுக்குப் பொருத்தமானதுமான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து, செயற்படுத்துவதற்கு கௌரவ அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் முன்வருவார்கள் என நம்புகின்றேன். அவரது திறமை இந்த விடயத்திலும் வெளிப்பட வேண்டும் என்பதே எமது அபிலாசையாகும்.

அடுத்ததாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பில் எனது கருத்துகளைத் தெரிவிக்க எண்ணுகின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில், போக்குவரத்து என்ற விடயத்தை எடுத்துக் கொண்டாலே, வீதி விபத்துகளே நினைவுக்கு வருகின்ற அளவுக்கு இன்று நிலைமை மாறிவிட்டுள்ளது. வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துகின்ற நோக்கில், இடதுபுறமாக முன்னேறிச் செல்லுதல், இரயில் கடவைகளில் சமிக்ஞை விளக்கினைப் புறக்கணித்து வாகனத்தைச் செலுத்துதல், வீதியில் வாகனத்தைச் செலுத்த வேண்டிய உச்ச வேக்தைவிட அதிக வேகத்தில் செல்லுதல் போன்றவற்றை கவனத்தில் கொண்டு அதிகூடிய தண்டப் பணத்தினை அறவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செயற்படுத்த வேண்டும் என்கின்ற கருத்தினை வலுப்படுத்தும் வகையிலேயே மேற்படி வீதி விபத்துக்கள் நிகழ்த்தப்பட்டு வருவதாகவே தெரிகின்றது.

அண்மையில், புத்தளம் மதுரங்குளி பகுதியிலும், வெயான்கொடை பகுதியிலும் நிகழ்த்துள்ள இரண்டு பாரிய வீதி விபத்துகளும் இதற்கு உதாரணங்களாகும்.

கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துகளைப் பார்க்கின்றபோது, அதன் காரணமாக உயிரிழக்கின்றவர்களது எண்ணிக்கையானது, வருடத்திற்கு, வருடம் அதிகரித்து வருகின்ற நிலைமைகளினையே காணக்கூடியதாக இருக்கின்றது.

2014ல் 2 ஆயிரத்து 240 பேர், 2015ல் 2 ஆயிரத்து 722 பேர், 2016ல் மூவாயிரத்து 3 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 2016ல் 2 ஆயிரத்து 824 பேர் கடுமையான காயங்களுக்கும், 13 ஆயிரத்து 961 பேர் சிறு காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது

இந்த வருடத்தைப் பொறுத்தவரையில், ஜனவரி மாதம் முதற்கொண்டு கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையில் வீதி விபத்துகள் காரணமாக 2 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்திற்குள் ஐந்தாயிரத்து 565 பேர் படுகாயங்களுக்கும், தொள்ளாயிரத்து 180 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

இதன்படி பார்கின்றபோது, இந்த வருடத்தில் நாளொன்றுக்கு சுமார் 7 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 15 பேர் படுகாயமடைகின்றனர். 25 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகின்றனர். இது ஒரு பாரதூரமான நிகழ்வாகவே எமது நாட்டில் அமைந்துள்ளது.

எனவே, இவ்விடயம் தொடர்பிலான இறுக்கமான சட்டதிட்டங்களும், போதுமான விழிப்புணர்வுகள் சாரதிகள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் வலுவுள்ளதாக ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்த விழிப்புணர்வுகள் வெறும் விளம்பரங்களாக மட்டுமல்லாமல், போதியளவில் தேசிய ரீதியில் உணர்வுப்பூர்வமானதாக முன்;னnடுக்கப்படுதலும் வேண்டும்.

அரச மற்றும் தனியார்த்துறைகளுக்கு இடையில் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் போட்டிகள் இருக்கலாம். ஆனால், அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கு இடையில், பாதையில் வேகத்தில் காட்டப்படுகின்ற போட்டிகளே இன்று பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன. போக்குவரத்தினை ஒரு மக்கள் சேவையாக கருதப்படுகின்ற நிலைமைபோய், அதனை வெறும் இலாபம் ஈட்டுகின்ற ஒரு துறையாகவே கொள்கின்ற நிலைமையே இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள அதிகளவிலான வாகன நெரிசல்கள் காரணமாக பயணிகள் படுகின்ற அவஸ்தைகளைத் தவிர்க்கும் வகையில் இரயில் சேவையினை மேலும் வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டியதன் தேவை குறித்தும் கூடிய அவதானங்கள் செலுத்தப்படல் வேண்டும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில் இரயில் போக்குவரத்துச் சேவையின் தேவையே எமது நாட்டில் இலகுவான போக்குவரத்திற்கான எதிர்கால கேள்வியாக இருக்கப் போகின்றது.

அதற்குரிய வசதிகள் இரயில்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக, இன்று புகையிரதத் திணைக்களத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற வடக்கு நோக்கியதான சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இரயில்களைப் பார்க்கின்றபோது, பயணிகள் போக்குவரத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற வகையிலேயே, போதிய பராமரிப்புகளும் இன்றிய நிலையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்டபோது, ஓரிரு இரயில்களில் காணப்பட்ட சுத்தமானது, அதன் பின்னர் ஒருபோதுமே காணப்படாத வகையிலேயே இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீர் வசதிகள், மலசலகூடங்கள் சுத்தம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும். கட்டணங்கள் அறிவிடப்படுகின்ற நிலையிலாவது சேவைகளை ஒழுங்காக வழங்குவதற்கு முன்வர வேண்டும்.

அதே நேரம், பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களாக தற்போது பணியில் இருக்கின்றவர்களது தொழில் ரீதியலான அந்தஸ்து, நிரந்தர நியமனங்கள், ஊதியப் பிரச்சினைகள் தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ போக்குவரத்து அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன், அந்த வகையில் மேற்படி ஊழியர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? இல்லை என்றே தெரிகின்றது. மேற்படி பணியாளர்கள் தொடர்பில் சாதகமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்பதையே மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இரயில் போக்குவரத்துச் சேவையின் தாமதங்கள் அகற்றப்பட வேண்டும் இதற்கு ஏதுவாக முதற்கட்டமாக, பொல்கஹவெலயிலிருந்து குருனாகலை வரையிலும், இரண்டாம் கட்டமாக குருனாகலையிலிருந்து மாஹோ வரையிலும், மூன்றாம் கட்டமாக மாஹோவிலிருந்து அனுராதபுரம் வரையிலும் இரட்டை இரயில் பாதைகளை அமைப்பது தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், கொழும்பிற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் மேலுமொரு இரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியத் தேவை உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அதுவரையில் ஒரு ஏற்பாடாக தற்போது வவுனியா வரை செல்கின்ற ‘ரஜரட்ட ரெஜின’ இரயில் சேவையினை யாழ்ப்பாணம் வரை நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ் குடாநாட்டிற்குள் ஒரு சுற்றுவட்ட சேவையாக இரயில் சேவையினை முன்னெடுக்கும் நோக்கில் கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான இரயில் பாதையினை அமைக்க வேண்டிய ஒரு கோரிக்கையினை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இந்த பாதை அமைப்பில் எவ்விதமான தடைகளும் இருக்கப் போவதில்லை. இடையில் பாலங்கள் கிடையாது. அரச காணிகள். சுமார் 25 கிலோ மீற்றர் வரையிலான தூரம். சமவெளித் தரை. எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானமெடுத்து, கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களது காலத்திலேயே இத்திட்டம் சாத்தியமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், வடக்கிற்கான இரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ஒரு நகரப் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டு, சிறிது காலத்தில் அது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இன்று அந்தச் சேவையின் தேவை எமது மக்களால் பெரிதும் உணரப்படுகின்றமையினால், அரச அலுவலர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களது வசதி கருதி மேற்படி சேவையினை மீள ஆரம்பிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

புகையிரத நிலைய உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் பலரும் தமிழ் மொழி மூலமான பரிச்சயம் அற்றவர்களாக இருப்பதனால் வடக்கைப் பொறுத்த வரையில் எமது பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதே போன்று, புகையிரதப் பாதைகள் மற்றும் கட்டிடங்களை பராமரிக்கின்ற தொழில்நுட்ப கீழ் நிலை உத்தியோகஸ்தர்கள் தென் பகுதியிலிருந்தே நியமனம் பெற்றிருக்கும் நிலையில,; மொழிப் பிரச்சினை மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற வற்றில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் தெரிய வருகின்றது. எனவே, இதற்கான போதியளவு நியமனங்களை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பது இத்தகைய சிரமங்களை தவிர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற தொழிற் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து கற்று வெளியேறுகின்றவர்களை புகையிரத திணைக்கள சேவைகளில் இணைத்துக் கொளள் முடியும் எனக் கருதுகின்றேன். இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்தவார் என நம்புகின்றேன்.

மாவட்ட புகையிரத உதவிப் பொறியியலாளர் அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கும் நடவடிக்கைத் தேவை.

மேலும், காங்கேசன்துறை – பொன்னாலை புகையிரத வீதிக்கென நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்திருந்தது. அதன் நிலை என்ன? என்றும், கடந்த காலத்தில் கொழும்பிற்கும் இரத்தினபுரி ஊடாக ஓப்பநாயக்கவிற்கும் இடையில் ஒரு புகையிரதப் பாதை இருந்ததாக ஞாபகம். அதற்கு என்ன நடந்தது? என்றும் கேட்க விரும்புகின்றேன்.

மேலும், பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? எனக் கேட்க விரும்புகின்றேன். மேற்படி விமான நிலையத்தினை ஒழுங்குறப் புனரமைத்து, அதன் ஊடாக இந்தியாவின் திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க முடியும். தற்போதைய நிலையில் இது பயனுள்ள ஏற்பாடாகும். இந்தியாவிலிருந்து சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தினமும் பெருந்தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்றனர். பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருவதற்கும் இது பயனுள்ளதாகவும், இலகுவானதுமாக அமையும்.

வட பிராந்திய போக்குவரத்துச் சபையானது ஊர்காவற்துறை நோக்கிய பாதை வழிகளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினது கட்டண நிர்ணயத்திற்கு மேலதிகமாக எமது மக்களது பணத்தை மோசடியான முறையில் அறவீடு செய்து வருவதாக தொடர்ந்தும் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்ற எமது தீவகப் பகுதி மக்களிடமிருந்து ஒவ்வொரு பயணிகளுக்குமாக ஒரு பயண தடவையில் 10 ரூபா முதல் 13 ரூபா வரையில் இவ்வாறு அறவிடப்படுவதாகவும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் ‘பாய்ச்சல் கட்டணம்’ என்ற பெயரில் குறித்த கட்டணங்கள் அறவிடப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் முறையிட்டு வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், தற்போதைய நிலையில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில விடயங்களையும் இங்கு அவதானத்தில் கொண்டு வர விரும்புகின்றேன்.

வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளராகத் தற்போது பணியாற்றுகின்றவர், குறிப்பிட்ட சில நாட்களே வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருகை தரும் காரணத்தினால், அங்குள்ள பணியாளர்களது பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிய வருகின்றது. இவர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானம் எடுத்து, சுமுகமான தீர்வுகள் எட்டப்பட வேண்டியுள்ளது. அல்லது, மாற்று ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற ஏழு சாலைகளிலும் தழுவல் கடமைகளில் பணிபுரிகின்றவர்களுக்கு பொருத்தமான நியமனங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

சாரதிகள், காப்பாளர்களுக்கான பற்றாக்குறைகள் காணப்படுவதால், போதுமானளவு சாரதிகள் மற்றும் காப்பாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஏழு சாலைகளுக்கும் போதுமான பேரூந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இன்று வடக்கின் பல்வேறு மீள்குடியேற்ற பகுதிகளிலும் போக்குவரத்திற்கான பேரூந்து வசதிகளற்ற நிலையில் எமது மக்கள் பல கிலோ மீற்றர்கள் நடந்து சென்றே தமது அன்றாட மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது இருக்கின்ற பேரூந்துகளும் மிகவும் பழையன. எனவே, புதிய பேரூந்துகளை போதியளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ் தீவகப் பகுதிகளுக்கு என ஊர்காவற்துறை பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

வடக்கு பிராந்நிய இலங்கை போக்குவரத்துச் சபை திடீர் பரிசோதனை குழு பயிற்சி பாடசலைக்கு 3 ஜீப் வாகனங்கள் தேவைப்படுவதாகக் கோரப்படுகின்றது.

அனைத்து பணியாளர்களினதும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவை வைப்பிலடப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

மேலும், வடக்கு மாகாண சபையின் நிர்வாக மையம் யாழ்ப்பாணத்தில் செயற்படுகின்ற நிலையில், மாகாணத்தின் தொலை தூர பகுதிகளில் உள்ள மக்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்துச் சேவையுடன் இணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கான போக்குவரத்துச் சேவையானது, வவுனியா – மிஹிந்தலை – ஹபரன ஊடாக மட்டக்களப்பு என்ற வழித்தடத்திலேய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் மேலுமொரு யாழ் – மட்டக்களப்பு போக்குவரத்துச் சேவை வவுனியா – திருகோணமலை – கிண்ணியா – மூதூர் – கிளிவெட்டி – வாகரை – வாழைச்சேனை ஊடாக மட்டக்களப்பு என அமைய வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், மேற்படி விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் அவாதனத்தில் கொண்டு சாதகமான ஏற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்க்கின்றேன்.

அபிவிருத்திப் பணிப் பொறுப்பு அமைச்சு தொடர்பிலான வாத, விவாதங்களும் இங்கு இடம்பெறுகின்றன.

எந்தவொரு அபிவிருத்திக்கும் மனித முகம் இருத்தல் வேண்டும். திறமையற்ற ஆளணிகளைக் கொண்டும், ஊழல் மிக்க நிர்வாகத்தைக் கொண்டு எந்தவொரு அபிவிருத்தியும் நிலைபேறான அபிவிருத்தியாக சாத்தியப்பட மாட்டாது. ஆத, தோல்வியினையே தழுவிவிடும்.

எனவே, பணியாளர்களுக்கான ஆற்றல் மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது எமது நாட்டினைப் பொறுத்தவரையில் அவசியமாகின்றது.

அதேநேரம், எமது நாட்டில் காணப்படுகின்ற பிராந்திய சமநிலையற்ற நிலைமைகள் நீக்கப்படத்தக்க வகையிலான அபிவிருத்திகளே இன்றியமையாத தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் கௌரவ அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் தனது நடவடிக்கைளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

பிராந்திய சமநிலை இன்மையே இன்று எமது பகுதிகளை அனைத்து துறைகள் சார்ந்தும் பின்னடைவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

எனவே, அனைத்துப் பகுதிகளுக்கும் சமாந்திரமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எமது மக்களை, எமது பகுதிகளில் சமநிலைப் படுத்துவதற்காக பொருளாதார வளங்கள் பகிந்தளிக்கப்பட வேண்டும். எமது மக்களை இந்த நாட்டில் சமநிலைப் படுத்துவதற்காக அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்ட வேண்டும் எனத் தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

Related posts:

யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 8 டிசம்பர் 2012  அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு மாகாண அமைச்சர்களின் வினைத்திறன் இன்மையும் காரணமாகும்.

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ள...
யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ள...