தேசிய கடப்பாடுகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச கடப்பாடுகளுக்காக அஞ்ச வேண்டியதில்லை -டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டு!

Tuesday, June 6th, 2017

சர்வதேச கடப்பாடுகள் குறித்து அவதானங்கள் செலுத்தப்படுகின்ற ஒரு நிலையில், ஒரு சந்தர்ப்பத்திலாவது தேசிய கடப்பாடுகள் என்ன என்பது குறித்து சற்று சிந்தித்துப் பார்த்து, அது தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான ஏதாவது முன்னகர்த்தல்கள் இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கேள்வி எழுப்பியுள்ளார்

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து  தேரிவித்தபோது.-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று பல்வேறு பிரச்சினைகள் எமது நாட்டில் அன்றாடம் தலைதூக்கியுள்ளதை நாம் காண்கின்றோம். அந்த வகையில், கடந்த மூன்று வருடங்களுக்குள் மீரியபெத்தை மற்றும் அரனாயக்க மண்சரிவுகள், வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவ பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம், சாலாவ இராணுவக் களஞ்சிய வெடிப்பு அனர்த்தம், மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம், தொடர்ந்த வரட்சி கால நிலை, தற்போதைய 15 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தம் போன்ற இயற்கை மற்றும் உரிய அவதானங்கள் இன்றிய மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட அனர்த்தங்கள் ஒரு புறமாக எமது மக்களை அழித்தும், பாரிய பாதிப்புகளுக்கு உட்படுத்தியும் வருகின்றன.

பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, நாட்டில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மேலாக மிகவும் பிரதான பிரச்சினையாக பொருளாதாரப் பிரச்சினை உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில், ஏனைய அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய பிரதான பிரச்சினை என்ற வடிவத்தையும் இந்த பொருளாதாரப் பிரச்சினையே கொண்டிருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

அதே நேரம், இந்த நாட்டின் அதி முக்கிய பிரச்சினையாகத் தொடர்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இன்று பின்தள்ளப்பட்டுள்ள நிலையையே எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது என்பது இன்னும் சிக்கல் நிறைந்த நிலையிலேயே காணப்படுகின்றதே அன்றி, பல்வேறு முயற்சிகள் அது தொடர்பில் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், அதற்குரிய இலகுத்தன்மையானது இன்னும் எட்டப்படாததாகவே இருக்கின்றது. இத்தகைய காலங்கடத்தல்கள் தொடர்ந்து ஏற்படுமாயின், அல்லது புதிய அரசியலமைப்போ அன்றி அரசியலமைப்பு சீர்திருத்தமோ சாத்தியமாகாத நிலையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றதும், தற்போதைய எமது அரசியலமைப்பில் உள்ளதும், நடைமுறையில் உள்ளதுமான 13வது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, படிப்படியாக முன்னேறிப் போகலாம் என்கின்ற விடயத்தை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். இதனை நடைமுறைப்படுத்தினால், கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்காக அலைந்து திரியும் தேவை ஏற்படாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது இந்த நாட்டில் பல ஆண்டு காலமாகவே புறையோடிப் போயிருக்கின்ற ஒரு பிரச்சினை என்பதை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறானதொரு பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும், தீர்க்க வேண்டும் எனக் கூறிக் கூறியே இறுதிவரையில் தீர்க்காமலேயே இருந்துவிட்டோம்.

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக தமிழ் – சிங்களத் தரப்புகளைச் சேர்ந்த சுயலாப அரசியல்வாதிகளே பிரதானமானவர்களாக இருக்கின்றனரே அன்றி, இந்த நாட்டு மக்கள் அல்ல. சர்வதேச கடப்பாடுகள் குறித்து அவதானங்கள் செலுத்தப்படுகின்ற ஒரு நிலையில், ஒரு சந்தர்ப்பத்திலாவது தேசிய கடப்பாடுகள் என்ன என்பது குறித்து சற்று சிந்தித்துப் பார்த்து, அது தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான ஏதாவது முன்னகர்த்தல்கள் இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றதா?

அந்த வகையில், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களினதும் அனைத்து உரிமைகள் உட்பட்ட அந்தந்த மக்களது அபிலாi~களைப் பூர்த்தி செய்கின்ற வகையிலான ஏற்பாடுகளை அரசு கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டுத் தொடர் ஆரம்பிக்கப்படுகின்ற காலகட்டத்தில் மட்டும்தான் நாங்கள் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகின்றோம். பின்பு அதைப் பற்றி மறந்துவிட்டு, அவ்வப்போது உணவின்போது தொட்டுக் கொள்ள ஊறுகாயைப் பயன்படுத்துவதைப் போல் ஆங்காங்கு கதைப்பதோடும், அறிக்கைகள் விடுவதோடும் நிறுத்திக் கொள்கின்றோம் என்ற நிலை மாற வேண்டும்.

எனவே, இது குறித்து நாம் தொடரந்தும் மிகவும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து தேசிய ரீதியில் நாம் முன்னெடுத்திருக்க வேண்டிய கடப்பாடுகளை நாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தால், இன்று இந்த சர்வதேச கடப்பாடுகள் குறித்து நாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டியத் தேவை இருந்திருக்காது.

இதைவிடுத்து, இரு இனங்களினதும் சில அரசியல் தலைமைகள் தொடர்ந்து இனவாத ரீதியாக இரு தரப்பு மக்கள் மீதும் கருத்துக்களைத் திணித்துவருகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

தமிழ் பேசுகின்ற மக்களோ, சிங்களம் பேசுகின்ற மக்களோ அடிப்படையில் இனவாதிகள் அல்லர். இந்த மக்களது வாக்குகளை அபகரிப்பதற்காக சில அரசியல் சுயநலவாதிகள் இனவாத வித்தை விதைத்து விடுகின்ற நிலையையே நாம் இங்கு பெரும்பாலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்று முல்லைதீவு கேப்பாப்புலவு மக்கள் தங்களது காணி, நிலங்களைக் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தங்களது காணி, நிலங்களைக் கோரி சொந்தக் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத மக்களும் போராட்ட களத்திற்குள் வந்துவிட்டனர். காணாமற் போனவர்களது விபரங்களை வெளியிடக் கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் இன்றுடன் 107வது நாளாகத் தொடர்கின்றது. நாளை இவ்வாறான போராட்டங்கள் இன்னும், இன்னும் பரவலாகி, காணி, நிலங்களை இழந்து நிற்கும் அனைத்து மக்களும், ஏனைய தேவைகளைக் கொண்ட மக்களும் போராட்டங்களில் ஈடுபடமாட்டார்கள் எனக் கூற முடியாது. இதற்கு யார் காரணம்?

தமிழ் மக்களது வரலாற்றை எடுத்துக் கொண்டால் எமது மக்கள் தொடர்ந்து பல்வேறு ஏமாற்றங்களுக்கு உட்பட்ட மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஏமாற்றியவர்கள் இரண்டு தரப்புகளிலும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுள்ள நிலைமைகளே அதிகமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த கால தேர்தல்களை எடுத்துக் கொண்டால், எமது மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே எமது மக்கள் பரவலாக ஏமாற்றப்பட்டனர். நடைமுறைக்கு சாத்தியப்படாத வாக்குறுதிகள் பல அவர்;களுக்கு வழங்கப்பட்டன. எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் உங்களது காணிகளை படையினரிடமிருந்து மீட்டுத் தருகின்றோம். இராணுவத்தை வடக்கிலிருந்து விரட்டுகின்றோம். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம். காணாமற் போனவர்களைக் கண்டு பிடித்து தருகிறோம். வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்றோம், ஜனாதிபதியும், பிரதமரும் சம~;டி தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள், எனவே நாங்கள் சம~;டியைப் பெற்றுத் தருகின்றோம் என்றெல்லாம் கூறிக் கூறி எமது மக்களை இப்படியே தொடர்ந்து ஏமாற்ற முடியுமென நினைத்து, ஏமாற்றி விட்டு எமது மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் இன்று, எமது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள். எமது மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்று நம்பியிருந்த இவர்களை எமது மக்கள் புறந்தள்ளிவிட்டு, சரியான திசைவழி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இனியும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை என சபதம் எடுத்துள்ள எமது மக்கள், தங்களை ஏமாற்றிய அரசில்வாதிகள் மீது கடுமையான வெறுப்பு கொண்ட நிலையில் இனியும் அவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், இன்று வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் போராட்டங்கள், நாளை இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் வீட்டுக் கதவுகளையும் தட்டி, தாங்கள் இதுவரையில் ஏமாற்றப்பட்டதற்கான நியாயத்தைக் கோரும்வரை ஓயாத ஒரு நிலையே காணப்படுகின்றது.

இந்த அரசாங்கமோ, எந்த அரசாங்கமோ ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்களில் அல்லது ஒரு வருட காலத்தில் தலையாயப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் ஆறிய கஞ்சி பழங் கஞ்சி என்ற நிலைதான் அந்தப் பிரச்சினைகளுக்கும் ஏற்படும் என்பதை நான் அடிக்கடிக் கூறி வருகின்றேன்.

கடந்த அரசு தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை எனவே, இந்த அரசைக் கொண்டு வந்து நாங்கள் தீர்ப்போம் என தமிழ் மக்களிடத்தே வாக்குறுதியளித்து, வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த அரசின் முதல் 100 நாட்கள் வேலைத்திட்டத்திலும் சரி, அதன் பின்னரான காலத்தினுள்ளும் சரி நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இல்லை.

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் வழங்கப்படுகின்றது. அதையேதான் தமிழர்த் தரப்பைப் பொறுத்த வரையிலும், இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் நான் கூறுகின்றேன். எமது பிரச்சினைகளை நாங்கள்தான் தீர்க்க வேண்டும்.

எமது நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டம் என்பது, இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்துதன் ஊடாக அந்நியோன்ய நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அதனைப் பேணி வளர்ப்பதற்கான கால கட்டமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நாடு செல்லவில்லை. மாறாக, சுயலாப அரசியல் கருதி இனவாதங்களையே மீண்டும், மீண்டும் தூண்டி, வளர்க்கும் செயற்பாடுகளே இரு தரப்பினர் மத்தியிலும் நிலை கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழலில் இருந்து கொண்டு தேசிய நல்லிணக்கம் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் யாவும் எதிர் நீச்சல் போடுவதை ஒத்ததாகவே இருக்கின்றன. அனைத்து மக்களினதும் உணர்வுகளை கண்டறிந்து கட்டியெழுப்பப்படுவதே தேசிய நல்லிணக்கம் அன்றி, அது வெறும் காட்சிப் பொருளல்ல.

இந்த நாட்டு மக்களிடையே தேசிய நல்லிணக்கச் சூழலை ஏற்படுத்துவதற்கென, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கென, அதற்காக ஓர் அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கென அல்லது அரசியல் யாப்பு ரீதியிலான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கென சாதகமான ஒரு சூழ்நிலையை இந்த நாட்டு மக்களிடையே உருவாக்குவதற்கான கலந்துரையாடலொன்றை அடிமட்டத்திலிருந்து நாம் மேற்கொண்டிருக்கின்றோமா? இல்லை. இவ்வாறானதொரு நிலையில் அரசியலாப்பு குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் அது பயனுள்ளதாக அமையும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

தென் பகுதி ஆட்சியாளர்களுடன் நாங்கள் இணக்க அரசியல் நடத்தியபோது, யுத்தத்தை மேற்கொண்ட ஆட்சியாளர்களுடனும், யுத்தத்தை வெற்றிகண்ட ஆட்சியாளர்களுடனுமே இணக்க அரசியல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

அந்த வகையில், இன்று ஒரு சுமுகமான நிலையே ஆட்சியில் தொடர்கின்ற நிலையில், இந்த ஆட்சியைக் கொண்டு வருவதற்காக உழைத்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்ற, இந்த ஆட்சியுடன் இணைந்து இணக்க அரசியல் நடத்தி வருகின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான அதிகளவு வாய்ப்புகள் இன்று கிட்டியிருந்தும், அவர்கள் அதனை எமது மக்களது நலன்கள் சார்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்து வருவது எமது மக்களின் துரதி~;ட நிலையாகும் என்றே கருதுகின்றேன்.

ஒரு கால கட்டத்தில் தவறான வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்தியும், மறைத்தும,; அதனூடாகத்தான் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று கூறியும் வன்முறை கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் பாரிய பங்களிப்பினை செய்துள்ள இந்தத் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், எமது மக்களின் அழிவுக்கும், இன்று எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பாதிப்புகளுக்கும் காரணமென்ற போதிலும், அந்த பாவங்களைக் கழுவுவதற்காகவேணும் இந்த தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் எமது மக்களின் தேவைகளைத் தீர்ப்பதற்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வாராத நிலையினையே காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே, எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நியாயமான முறையில் அரசிடம் வைக்கும் கடப்பாடு, இன்று தமிழ் மக்களது அதிகளவிலான வாக்குகளை கொள்ளையிட்டு, இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தரப்பினருக்கு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் இப்படியே செயற்திறன் இன்றி அரசியல் பதவி நாற்காலிகளை சூடேற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். அதே நேரம், நியாயமான கோரிக்கைளை இனங்கண்டு, அவற்றைப் படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசுக்கு உண்டு. அந்த வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால், இன்று நாம் எவருக்கும் தலைகுணிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஒரு நாட்டில் ஒரு தரப்பினருக்கு ஏற்படுகின்ற பிரச்சினையை அந்த தரப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சினைதானே என அதனைத் தீர்க்க முயற்சிக்காமல், அதனை உதாசீனம் செய்வதால் அந்தப் பிரச்சினையானது முழு நாட்டினையும், முழு நாட்டு மக்களையும் எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை கடந்த சுமார் 30 வருட கால யுத்த அனுபவங்களில் கண்டவர்கள் நாங்கள். எனவே, தமிழ் மக்களது நியாயமான பிரச்சினைகளை, எவ்விதமான இடைத் தரகர்களினதும் இடையூறுகளுமின்றித் தீர்ப்பதற்கு இந்த அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும்,

எந்தவிதமான பிரிவினைவாதங்களுமற்ற, அனைத்து உரிமைகளையும், கௌரவங்களையும் பெற்றவர்களாக அனைத்து மக்களும் வாழுகின்ற வகையிலான ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி, அதனை எமது எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்றவகையில் எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்...