70 ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டில் ஜப்பானிய படையினர்!
Wednesday, November 23rd, 2016
ஐ.நா.அமைதி காக்கும் நடவடிக்கைக்கு ஜப்பானிய துருப்பினர் தென் சூடான் சென்றுள்ளனர். எனினும் இது இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஜப்பான் இராணுவம் வெளிநாட்டு மோதல் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜப்பானிய அமைதிகாக்கும் படையினருக்கு மாற்றாகவே 350 துருப்பினர் கடந்த திங்கட்கிழமை தென் சூடானை அடைந்துள்ளனர். இந்த துருப்புகள் தலைநகர் ஜூபாவில் பொறியியல் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபடவுள்ளன.
ஜப்பானிய இராணுவத்திற்கு யுத்த நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 70 ஆண்டு கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு தளர்த்திய நிலையிலேயே அந்த இராணுவத்திற்கு வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க வழி ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த மாற்றம் ஜப்பானின் யுத்த எதிர்ப்பு அரசியல் யாப்புக்கு முரணானது என்று நாட்டுக்குள் கடும் விமர்சனம் உள்ளது.தென் சூடானில் ஏற்கனவே 12,000க்கும் அதிகமான ஐ.நா அமைதிகாக்கும் படையினர் இருந்தபோதும் பொதுமக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
2011 ஆம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்த தென் சூடானில் அரசியல் பதற்றம் மற்றும் உள்நாட்டு யுத்தம் நீடித்து வருகிறது.

Related posts:
|
|
|


