இரட்டை கோபுர தாக்குதலில் : சவுதி அரேபியா மீது வழக்கு நிராகரித்த ஒபாமா!
Saturday, September 24th, 2016
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீவிரவாதிகளால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட உலக வர்த்தக மையம் இரட்டை கோபுரம் இரண்டு விமானங்கள் மூலமாக தாக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் 2996 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 6 ஆயிரம் பேர் காயம் அடைந்திருந்தனர்.
இந்த இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விளைவாக அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகருக்குள் புகுந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின் அடிபடையில் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருந்ததாக உறுதி செய்யப்பட்டது.தாக்குதலுக்கு பயன்படுத்திய விமானங்களை கடத்திய 19 அல் கொய்தா தீவிரவாதிகளில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பதும் ஆதாரத்துடன் நிரூபணமானது.
இந்நிலையில், சவுதி அரேபியா அரசின்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என இந்த தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துகளை பறிகொடுத்தவர்களின் வாரிசுகள் தீர்மானித்தனர்.இதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பான அதிகாரத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இருந்தும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவை அதிபர் ஒபாமா இன்று தனது வெட்டுரிமையால் (வீட்டோ அதிகாரம்) நிராகரித்தார்.
The Justice Against Sponsors of Terrorism Act (JASTA) எனப்படும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நீதி என்னும் இந்த சட்டத்தை அனுமதித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் பிறநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் நேரிடும்.
மேலும், அமெரிக்கா நீண்டகாலமாக கடைபிடித்துவரும் பிறநாட்டின் இறையாண்மை தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு தீமையாக அமைந்துவிடுவதுடன் கடல்கடந்துவாழும் அமெரிக்கர்கள் மீதும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா, இந்த சட்ட மசோதாவை நிராகரித்து கையொப்பமிட்டுள்ளார்.
இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒரு வெளிநாட்டை சேர்ந்த அரசு இருந்துள்ளது என்பதை அறிந்து அதற்குரிய வகையில் செயலாற்ற இதைப்போன்ற சட்டம் சரியான வழிமுறையாக இருக்க முடியாது.
இத்தகைய சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவை எண்ணியும், உலகளவில் நாம் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் நமது நட்பு நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த சட்டத்தை நிராகரித்துள்ளதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிபர் ஒபாமாவுக்கு குடியரசு கட்சி அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதாவை ஒபாமா புறக்கணித்தது அவமானகரமான செயலாகும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், நான் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றால் உடனடியாக இதுபோன்ற சட்டத்தில் கையொப்பமிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|