ஐரோப்பாவில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022

ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் –  இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஜேர்மனி நாட்டில் அதிக அளவாக 4 ஆயிரத்து 500 பேர், ஸ்பெயின் நாட்டில் 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பிரித்தானியாவில் 3,200 பேரும், போர்த்துகல்லில் ஆயிரத்திற்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

ஏனெனில், இன்னும் பல நாடுகள் வெப்ப பாதிப்பிற்கு கூடுதலான மக்கள் உயிரிழந்த தகவல்களை அளித்து வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு ஆண்டு 2022-ம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என பிரான்ஸ் நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார படிப்புகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.

இது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகம். இதற்கு, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்பு, அது ஜூலை மாத மத்தியில் கடும் வெப்ப அலை பரவலானபோது அதனால் மக்களில் பலர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: