வைத்தியர்களில் 57% பேர் போலிகள் – சுகாதாரத்துறை தகவல்?

Thursday, August 15th, 2019

இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.

இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சிலில் நாடு முழுவதும் 11 இலட்சத்து 46 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால், இவ்வாறு முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமானோர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் 57.3 சதவீதம் பேர் முறைப்படி படிக்காதவர்கள் என்று இந்திய சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.

பெரும்பாலும் கிராம பகுதிகளில் இதுபோன்ற டொக்டர்கள் தான் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு வேறு படித்த டொக்டர்கள் கிடைக்காததால் இந்த போலி டொக்டர்களிடம் நோயாளிகள் செல்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு டொக்டர் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் 1,456 பேருக்கு ஒரு டொக்டர் தான் இருக்கிறார்கள்.

உரிய டொக்டர்கள் இல்லாததால் போலி டொக்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த விஷயத்தில் அனைத்து முதல்-மந்திரிகளும் கவனம் செலுத்தி உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Related posts: