அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை – திணறும் மக்கள்!

Tuesday, January 3rd, 2023

அமெரிக்காவில் உறைய வைத்த கடும் பனிப்பொழிவை தொடர்ந்து வெளுத்து வாங்கும் கனமழை, முக்கிய நகரங்களை புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பனிப்புயல் வீசியதால், பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து அவதிக்குள்ளாகினர்.

அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் உறைபனியால் உறைந்து போயின. சாலைகள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து கிடந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்

இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இதனால், புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கலிபோர்னியா நகரம், கனமழையை சந்தித்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பனிப்புயல், கனமழை என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: