வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை – ஐ.நா நிபுணர்கள் குழு புதுப்பிப்பதை முறியடித்தது ரஷ்யா!

Saturday, March 30th, 2024

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஐ.நா நிபுணர்கள் குழுவை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தடையை மீறி செய்து வருவதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது.

இதற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இருந்து சீனா ஒதுங்கிக் கொண்டது. எனினும் வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியது.

தனது வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் நிபுணர்கள் குழுவின் வருடாந்திர புதுப்பித்தலை முறியடித்தது.

உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை மாற்றியதாக, அமெரிக்கா தலைமையிலான குற்றச்சாட்டுகளுக்கு இடையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இராணுவ உறவுகளை ஆழப்படுத்த ரஷ்யாவும், வடகொரியாவுக்கு உறுதியளித்த நிலையில், தற்போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்துள்ளன.

இதுகுறித்து ஐ.நாவுக்கான துணை அமெரிக்க தூதர் ராபர்ட் வுட் சபையில், ”உலகின் மிகவும் ஆபத்தான அணுசக்தி பரவல் பிரச்சனைகளில் ஒன்றான அமைதியான, இராஜதந்திர தீர்வுக்கான வாய்ப்பை மாஸ்கோ குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: