வடகொரியாவில் முதலாவது கொரோனா தொற்றுறுதி – தீவிர அவசரநிலையை அறிவித்தார் வடகொரிய ஜனாதிபதி!

Thursday, May 12th, 2022

வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நாட்டில் தீவிர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நாடு முழுமையாக பூட்டப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக கொரோனா பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோதும், அணு ஆயுதம் கொண்ட வடகொரியா, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கவில்லை.

ஏனைய நாடுகளில் 2020 இல் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து வடகொரிய அரசாங்கம் அதன் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தநிலையில் தற்போது தலைநகர் பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கொரோனாவுடன் ஒத்துப்போவதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே ஜனாதிபதி கிம் ஜோங் உன் உட்பட உயர் அதிகாரிகள் இன்று நெருக்கடி நிலையை அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை.

இதேவேளை ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மற்றும் ரஷ்யா வழங்கும் தடுப்பூசிகளை வட கொரியா நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: