மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை – பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “உலகம் மீண்டும் படுகுழியின் விளிம்பிற்கு வந்துவிட்டது” எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

“ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸ், 2022 ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க மொஸ்கோவின் படைகளுக்கு ஊக்கமளித்திருந்தது. அத்துடன், புவிசார் அரசியலில் ரஷ்யாவின் வழியையும் தொடர்ந்து பின்பற்றுகிறது.

மொஸ்கோவுடன் கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்துவதுடன், வாக்னர் கூலிப்படையினருடன் பயிற்சி “பலன்களை வழங்கியுள்ளதாக” லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

நேட்டோ தற்போது ஐரோப்பாவில் அதன் மிகப்பெரிய இராணுவ பயிற்சியை ‘ஆபரேஷன் ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர்’ என்ற பெயரில் முன்னெடுத்துள்ளது. அதில் சுமார் 90,000 துருப்புக்கள் பங்கேற்றுள்ளன.

இந்தப் பயிற்சிகளை குறிப்பிட்டுள்ள லுகாஷென்கோ, தனது நாட்டு உளவுத்துறை இதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடுகளிடம் இருந்து சுமார் 32,000 துருப்புக்கள் “பெலாரஸ் மற்றும் ரஷ்யாவிற்கு அருகாமையில்” நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

“நிலைமை எவ்வளவு தீவிரமானது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், S-400 விமான எதிர்ப்பு அமைப்புகளின் இரண்டு புதிய பிரிவுகள் இப்போது நாட்டின் இராணுவத்துடன் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவை அமெரிக்க வான் பாதுகாப்பிற்கு சமமானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து பெலாரஸ் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. கடந்த மாதமும் இருநாடுகளும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: