மிகப் பெரிய சரக்கு கப்பலில் தீவிபத்து: 1,100 சொகுசு கார்கள் கருகியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, February 19th, 2022

ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பல் ஜேர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.

இந்நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் அசோர்ஸ் தீவு அருகே நேற்று சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.

அந்த கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயினால் 1,100இற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த தகவலை அறிந்த மீட்புப் படையினர் அதிலிருந்த 22 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இருப்பினும் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்த வண்ணமுள்ளதாகவும், மேலும் சொகுசு ரக கார்கள் தீயில் எரியும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: