நாங்கள் நல்ல நண்பர்கள் – இந்தியா தொடர்பில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021

இந்தியாவும், சீனாவும் நல்ல நண்பர்கள் என்றும் இருவரும் வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதல், எல்லையில் இருநாட்டு படைகள் குவிப்பு என்று இந்திய – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.

இருநாட்டு உறவில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஹூவா சுனிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான மோதலால் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல என்றும் நண்பர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவருமே வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: