சுவாதி கொலை : நடந்தது என்ன?

Sunday, July 3rd, 2016

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறைஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை சுமார் 6.40 மணியளவில் சுவாதி (24) த/பெ சந்தான கோபாலகிருஷ்ணன், சூளைமேடு மின்சார ரயிலுக்காக காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபரால் முகம் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திரு.ரகுபதி(55) கமர்சியல் மேற்பார்வையாளர், நுங்கம்பாக்கம் புக்கிங் ஆபிஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கின் விசாரணையானது கடந்த 27.6.2016 அன்று சென்னை பெருநகர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் புலன் விசாரணையை துரிதமாக செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு டி.கே.இராஜேந்திரன் அவர்கள் உத்தரவிட்டார்.

இதன்படி கூடுதல் காவல் ஆணையாளர் திரு.சங்கர், அவர்கள் தலைமையில் இணை ஆணையாளர்கள் திரு.மனோகரன், திரு. அன்பு ஆகியோர்களுடன் திருவல்லிக்கேணி துணை ஆய்வாளர் திரு.பெருமாள், தியாகராய நகர் துணை ஆணையாளர் திரு.சரவணன், கூடுதல் துணை காவல் ஆணையாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப்பிரிவு, மூன்று உதவி ஆணையாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப் பிரிவு, மூன்று உதவி ஆணையாளர்கள் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளர் கேபிஎஸ் தேவராஜ் என்பவர் இவ்வழக்கின் முதன்மை புலன் விசாரணை அதிகாரி ஆவார்.

இவ்வழக்கில் தனிப்படையினர் சூளைமேடு பகுதியிலும், சுவாதி பணிபுரிந்த மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியிலும் மற்றும் புறநகர் பகுதியிலும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இறந்துபோன சுவாதியின் நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது இரயில் நிலையத்திலிருந்து குற்றவாளி தப்பிச்சென்ற வீடியோ காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் 5 இடங்களில் சேகரிக்கப்பட்டு சம்பவத்தை பார்த்த நேரடி சாட்சிகளிடமும் விசாரணை செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

தனிப்படையினர் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் விசாரணை மேற்கொண்டனர். புகார் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு மற்றும் மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சைபர் குற்றப் பிரிவினரும் பயன்படுத்தப்பட்டனர்.

தனிப்படையினர் சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்த புகைப்படத்தை காட்டி விசாரணை செய்தனர்.

மேலும் சௌராஷ்டிரா நகரில் உள்ள ஏஎஸ் மேன்சனின் சந்தேக நபரின் புகைப்படத்தை காட்டி விசாரணை செய்ததில் அந்த விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உள்ள புகைப்படடும் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படமும் ஒத்துப்போனது.

மேலும் விசாரணை செய்த போது அந்த நபரின் பெயர் ராம்குமார் என்பதும், அவனது சொந்தஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள டி.மீனாட்சிபுரம் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் இச்சம்பவத்திற்கு பிறகு தலைமறைவானதும் தெரியவந்தது.

தொடர்ந்து 1.7.2016 அன்று இரவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரை தனிப்படையினர் தொடர்பு கொண்டு ராம்குமாரின் இருப்பிட முகவரியை விசாரிக்க ஒரு தனிப்படையினரை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பேரில் திருநெல்வேலி காவல்துறையினரின் தனிப்படையினர் டி.மீனாட்சிபுரம் சென்று ராம்குமாரின் வீட்டினை சோதனையிட, அவர் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்துள்ளார்.

காவல்துறையினர் வருவதை கண்டு அவர்களை பயமுறுத்தும் நோக்கில் தன்னிடம் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று 2.7.2016 அன்று ராம்குமாரை சென்னை பெருநகர காவல்துறையினர் காவலில் வைத்து புலன் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.சுவாதியின் வீடும் சூளைமேடு பகுதியில் உள்ளது. சுவாதி மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து செங்கல்பட்டு அருகில் உள்ள மகேந்திரா வோல்ர்டு சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

சுவாதி தினசரி பணிக்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் சென்று வந்துள்ளார், இதனையறிந்த ராம்குமார் அடிக்கடி அவரை பின்தொடர்ந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த 24.6.2016 அன்று நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த சுவாதியை தாக்கி கொலை செய்துள்ளார்.

புலன் விசாரணையில் தனிப்படையினர் ராம்குமார் சுவாதியை பின்தொடர்ந்ததற்கான ஆதாரங்களையும் மற்றும் தடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.இவ்வழக்கின் புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை விரைவில் கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இராஜேந்திரன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு கூட்டாளியாக யாரும் செயல்படவில்லை என்றும், ராம்குமார் கொலை வழக்கில் ஏதாவது தகவல் தெரிந்தால் பொலிஸுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டியிருந்தோம். தகவல் அளிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியிருந்தோம்.

எங்கள் கோரிக்கையை ஏற்றுப் பொதுமக்களில் பலர் எங்களுக்கு துப்பு கொடுத்தனர். பொதுமக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், ஊடகங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: