சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகளுக்கு தடை!

Thursday, November 7th, 2019

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகள் விற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இதுகுறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;

பாடசாலைகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் சிற்றுண்டிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிற்றுண்டிச்சாலைகளில் மாணவர்களின் நலனை பேணும் விதத்தில் உணவுகள் விற்கப்படுவதே சரியானது. ஆனால் சிற்றுண்டிச்சாலைகளில் பெரும்பாலும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளது.

எப்போதுமே அதிக கொழுப்புகள் நிறைந்த, அதிக காரம் நிறைந்த, அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே பள்ளிகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகள் மற்றும் மேற்கண்ட விதமான உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது. இதுகுறித்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறுதல் கூடாது. இதுகுறித்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணையாக இருக்கும். இதர தரமற்ற பொருட்கள் அவர்களது உடல்நலனை பாதிக்கும்.

எனவே மாணவர்களின் உடல்நலம் பேணுவது முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்று அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Related posts: