இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக வெளியேறுவோம் – ஜோ பைடன்!

Wednesday, August 25th, 2021

இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் செயற்பாடு மும்முரமாக இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சில அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் வெளியேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒன்பது நாட்களுக்கு முன்பு தலிபான்களிடம் வீழ்ந்த காபூலில் இருந்து குறைந்தது 70 ஆயிரத்து 700 பேர் இதுவரை விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வெளியேற்ற நடவடிக்கையை நீடிப்பதற்கு நாட்டில் உள்ள தலிபான் போராளிகள் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக விமானப் போக்குவரத்து விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தேவை ஏற்படின் காலக்கெடுவைத் தாண்டிய தற்காலிக திட்டங்களை உருவாக்குமாறு பென்டகன் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அகதி அந்தஸ்துக்கு தகுதிபெறும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான்களை மீளக்குடியமர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர் இதில் அமெரிக்காவும் ஒரு பங்கினை வகிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts: