ஆஸியில் விருந்து நிகழ்வின்போது கத்தியால் தாக்கியதில் 7 பேர் கவலைக்கிடம்!

Sunday, August 7th, 2016

அவுஸ்திரேலியாவில் விருந்து நிகழ்ச்சியின்போது நடந்த தகராறில் மாறி மாறி கத்தியால் தாக்கியதால் 7 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Ryde என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு குழுவினர் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் விருந்தின் இடையே சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது அங்கு கத்தியால் தாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இதில் இரு குழுக்களாக பிரிந்து கத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்துள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 16 வயது நபர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரும், 16 மற்றும் 17 வயதுடைய இரு ஆண்களும் காயத்துடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த நபர்களுடன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வரை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பொலிசார் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி கத்தியால் தாக்குதல் நடைபெற்றதன் காரணம் குறித்தும் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related posts: