வரலாறு படைத்த சிங்கப்பூர் அணி!

Tuesday, October 1st, 2019

டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி சிங்கப்பூர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. ஐ.சி.சியின் முழுநேர உறுப்பினர் நாடு எனும் அங்கீகாரத்தைப் பெற்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது.

நேற்றைய தினம் ஜிம்பாப்வே-சிங்கப்பூர் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. ரோகன் ரங்கராஜன், சந்திரமோகன், விஜயகுமார், பாஸ்கரன் ஆகிய தமிழர்களுடன் சிங்கப்பூர் அணி களம் கண்டது. மழை காரணமாக போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய சிங்கப்பூர் அணியில், ரோகன் ரங்கராஜன்-சந்திரமோகன் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ரங்கராஜன் 39 ஓட்டங்களும், சந்திரமோகன் 23 ஓட்டங்களும், அடுத்து வந்த டேவிட் 41 ஓட்டங்களும் விளாசினர். மன்பிரீத் சிங் அதிரடியாக 23 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம், சிங்கப்பூர் அணி 181 ஓட்டங்கள் குவித்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சகப்வா 19 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் சீன் வில்லியம்ஸ் 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார். ஆனால் 16வது ஓவரில் இருந்து ஜிம்பாப்வேயின் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சிங்கப்பூரின் ஜானக் பிரகாஷ் அபாரமாக பந்துவீசி 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் சிங்கப்பூர் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஐ.சி.சி அங்கீகாரத்தை பெற்ற நாடு ஒன்றை சிங்கப்பூர் அணி வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

Related posts: