மொரின்ஹோ வரவை எதிர்பார்க்கும் றூணி!

Thursday, July 14th, 2016

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் றூணி, தனது அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோவின் கீழ் விளையாடுவதற்கு, அதிக ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, இடம்பெறவுள்ள பிறீமியர் லீக் பருவகாலம் தொடர்பாக எதிர்பார்ப்புடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பணியாற்றிய லூயிஸ் வான் காலின் காலத்தில், மத்தியகள வீரராக விளையாடிய வெய்ன் றூணி, கடந்த பருவகாலத்தில் கோல்களைப் பெறுவதற்குத் தடுமாறியிருந்தார். ஆனால், இம்முறை அவரை முன்கள வீரராகக் களமிறக்கும் சமிக்ஞைகளை, மொரின்ஹோ வெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஸல்ட்டான் இப்ராஹிமோவிக்குடன் இணைந்து, மிகச்சிறப்பான இணைப்பை உருவாக்குவதற்கு, றூணி முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றூணி, “ஜொஸ்ஸூடன் இப்பருவகாலத்தில் இணைந்து செயற்படுவதற்கு, நான் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுகிறேன். உலகின் மிகச்சிறந்த முகாமையாளர்களில் அவரும் ஒருவர். மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு, இது மிகவும் சுவாரசியமான காலமாகும். அவரை நான் எப்போதும் ஒரு மனிதராகவும் முகாமையாளராகவும் மதித்திருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த றூணி, எப்போதுமே தான் மிகவும் ஊக்கத்துடன் காணப்படும் ஒருவர் என்றே நினைப்பதாகவும், ஆனால் புதிய முகாமையாளரின் கீழ் விளையாடுவதற்கு, அதிகமான ஊக்கத்துடன் காணப்படவில்லை என்று சொன்னால், அது பொய் சொல்வது போன்றதாகும் எனவும் தெரிவித்தார்.

Related posts: