முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை!

Monday, April 10th, 2017

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து கொல்கத்தா அணியின் காம்பீர், கிறிஸ்லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கொல்கத்தா அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 44 ஓட்டங்களாக இருக்கும்போது காம்பீர் 13 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா 4 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினார்கள்.

பாண்டே இறுதிவரை வெளியேறாமல் 47 பந்தில் 81 ஓட்டங்கள் எடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.

துவக்கம் முதல் சீராக ஓட்டங்களை குவித்து வந்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான படேல் 30 ஓட்டங்களையும், பட்லர் 28 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித்ஷர்மா, கே.பாண்டியா மற்றும் பொல்லார்டு சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் எச்.எச். பாண்டியா 11 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக 29 ஓட்டங்களை குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் ஒரு ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை சேர்த்து கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts: