நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

Thursday, February 2nd, 2023

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 126 ஓட்டங்களையும் திரிபத்தி 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டேரில் மிட்செல், இஷ் சோதி, டிக்னர் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 235 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 12.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டேரில் மிட்செல் 35 ஓட்டங்களையும் மிட்செல் சான்ட்னர் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யபட்டார்.

Related posts: