உலகக் கிண்ணம் : இந்தியா வெற்றி!

Wednesday, July 3rd, 2019

வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் குவித்தது.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசனை (66) தவிர மற்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறிவிட்டனர்.

இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், ஏழாவது விக்கெட்டுக்கு சபீர் – சைஃபுத்தீன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தது.

சப்பீர் ரஹ்மான் 36 ரன்களில் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சைஃபுத்தீன் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

கடைசி மூன்று ஓவர்களில் வங்கதேசத்துக்கு வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் பந்து வீசிய பும்ரா அடுத்தடுத்து ருபேல் ஹுசேன், முஸ்தாபிசுர் ரஹ்மான் இருவரையும் போல்டாக்கி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணியின் சார்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹார்டிக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் 6-வது முறையாக அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Related posts: