கோஹ்லி உலக சாதனை: தொடரை வென்றது இந்தியா!

Saturday, February 17th, 2018

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைபபற்றியது.

தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நேற்று இடம்பெற்ற ஆறாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி, 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 46.5 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர், 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தமது, 35 ஆவது சததத்தைப் பூர்த்தி செய்த அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று சதங்களை கடந்த விராட் கோலி, 558 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனூடாக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கோலி படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் வீரரான ரோஹிட் சர்மா, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 491 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஜோர்ஜ் பெய்லி இந்திய அணிக்கு எதிரான குறித்த தொடரில் 478 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லி தமது நூறாவது பிடியையும் எடுத்துள்ளார்.

அத்துடன், விக்கட் காப்பாளர் மஹேந்திரசிங் டோனி, 600 பிடிகளை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: