ஐதராபாத் டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!
Monday, January 9th, 2017பங்காளதேஷ் கிரிக்கெட் அணி பெப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டி இந்த 8 ஆம் திகதி முதல் 12-ஆம் திகதி வரை ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
பங்காளதேஷ் முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் ஆட இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த அணி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா – வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது.
போதிய நிதி ஆதாரம் இல்லாததால் டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஜான்மனோஜ் தெரிவிக்கையில், போதிய நிதி இல்லை என்பதை கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுப்படுத்தி விட்டோம். கிரிக்கெட் வாரியம் நிதி அளித்தால் மட்டுமே போட்டியை நடத்த இயலும்.
இதனால் போட்டியை நடத்துவதற்கான வழி இல்லை என தெரிவி்த்தார். டெஸ்ட் போட்டியை நடத்த இயலாது என்று தெரிவித்துவிட்டதால் ஐதராபாத்தில் போட்டி நடப்பது சந்தேகத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரையில் கிரிக்கெட் சம்மேளனம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில சங்கத்துக்கு நிதி வழங்க இயலாத சூழ்நிலையில் உள்ளது. எனவே இந்தியா – வங்காளதேசம் டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
எந்த இடத்தில் போட்டியை நடத்துவது என்பது பற்றி கிரிக்கெட் சம்மேளனம் இதுவரை தீர்மானிக்கவில்லை. இதற்கிடையே இந்தியா – இங்கிலாந்து இளையோர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டியை சென்னையில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இளையோர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பெப்ரவரி 13 ம் திகதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Related posts:
|
|