உலக கிண்ண கால்பந்து தொடர்: சொதப்பிய மெஸ்ஸி!

Sunday, June 17th, 2018

ஃபிபா உலக கிண்ணம் தொடரில் நேற்றைய போட்டியில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து அசத்திய நிலையில் மெஸ்ஸி கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் தவறவிட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

உலகின் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்கும் ஃபிபா கால்பந்து உலக கிண்ணம் கடந்த ஜூன் 14 ஆம் திகதி ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது.

அதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம்பொருந்திய போர்த்துக்கல் அணியும் ஸ்பெயின் அணியும் மோதின.

பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் தனி ஆளாக போராடிய ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதன்மூலம் உலக கிண்ணத்தில் அதிக வயதில் ஹாட்ரிக் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.

அவரின் அற்புதமான இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் ரொனால்டோவின் போட்டி வீரராக கருதப்படும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும் ஐஸ்லாந்து அணியும் மோதின.

இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி கடைசி வரை போராடி ஒரு கோலை மட்டுமே அடித்தது. ஆட்டநேரம் முடிவில் அர்ஜென்டினா 1 கோலும் ஐஸ்லாந்து 1 கோலும் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்து அணியை வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணிக்கு ஏமாற்றமாக அமைந்த நிலையில் மற்றொரு புறம் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் தவறவிட்டு ஒரு கோல் கூட அடிக்காமல் அனைவரையும் ஏமாற்றினார்.

உலகின் முன்னணி வீரர் யாரென்று ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ரசிகர்களுக்கு இடையே போட்டி நிலவும் நிலையில் ரொனால்டோ ஒருபுறம் சாதனைகள் படைக்க மெஸ்ஸி ஒருபுறம் சொதப்பியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related posts: