உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி!

Friday, July 5th, 2019

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முதல் முறையாக நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரான்சில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லயானில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்டியில், அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து, மற்றொரு அரையிறுதிப் போட்டியில், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

நெதர்லாந்து அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தாலும், ஸ்வீடன் வீராங்கனைகள் அவர்களை கோல் அடிக்க விடாமல் அபாரமாக தடுத்தனர். இதனால் போட்டி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜாக்கி குரோனன் கோல் அடித்து அசத்தினார். அந்த கோலே வெற்றிக்கான கோலாக மாறியது. முன்னதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டபோது ஸ்வீடன் வீராங்கனைகள் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்த வாய்ப்பை நெதர்லாந்து சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று, முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து, வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது நெதர்லாந்து. அதற்கு முன்பாக நாளை மறுதினம் நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து-ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன.

Related posts: