ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் !

Friday, July 15th, 2016

கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸின் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது.

40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரமொன்றில் ஒவ்வொரு சீசனிலும் பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள் விளைகின்றன. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசோர்ட்டில் விவசாயத்திற்கென தனி பசுமைக்குடில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கேதான் ஒக்டோபஸ் தக்காளி மரங்களும் உள்ளன.

சீனாவில் இருந்து தக்காளி விதைகள் கொண்டு வரப்பட்டு அங்கே விதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு தக்காளி மரம் வளர்வதற்கு 1.2 முதல் 1.5 ஆண்டுகள் வரை ஆகிறது. 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம்.

தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 2 தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 522 கிலோ. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கிறது. டிஸ்னி வேர்ல்டில் 1 மணி நேரம் பசுமைக்குடிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அசாதாரணமான செடிகள், காய்கள், பழங்கள் போன்றவற்றை இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு விளைகிறது, எப்படிப் பராமரிக்கிறார்கள் போன்ற தகவல்களை சுவாரசியமாகத் தருவார்கள். தக்காளி மரத்தில் காய்ப்பதே ஓர் ஆச்சரியம், அதிலும் பல்லாயிரக்கணக்கில் காய்த்துத் தொங்குவதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.

Related posts: