34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளது – லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு!

Monday, November 28th, 2022

பண்டிகைக் காலத்தையொட்டி டிசம்பர் மாதத்திற்காக 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,4000 மெற்றிக்தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததும் அதனை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த உடன் வழமைபோன்று சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை வரை சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: