2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தி பொருளாதாரத்திற்கே முன்னுரிமை – துறைசார் வல்லுநர்கள் தகவல்!

Sunday, September 19th, 2021

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த ஆண்டுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும் என்பதுடன் முன்மொழியப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் தனியார்துறை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இலங்கை நிதி அமைச்சகத்தின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

“உற்பத்தி பொருளாதாரம்” என்பது எதிர்வரும் நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளாக இருப்பதால், விவசாயம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அமைச்சகங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளன.

2022ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படும். எனினும் மின்சார கார்களின் இறக்குமதி ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம் பொதுத்துறையில் கூடுதல் செலவுகள் குறைக்கப்படும். மூன்று ஆண்டு பின்னடைவுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெற வைக்கும் வகையில், வருடாந்த வருவாயை ஐந்து பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் நோக்கத்துடன் ஹோட்டல் துறைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மீன் இறக்குமதி திட்டங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேவேளை ஆசிரியர்களின் சம்பள ஒழுங்கின்மை பிரச்சனைக்கு தீர்வு கண்டால், சம்பளத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திழகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: