மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாத்தது விஜயகலா மகேஸ்வரனே – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன் சாட்சியம்!

Sunday, September 6th, 2020

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ்குமார் என்பவரை விடுவிக்குமாறு விஜயகலா மகேஸ்வரன் நேரடி அழுத்தம் வழங்கியதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான ஞானலிங்கம் மயூரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றையதினம் சாட்சியம் அளித்த ஞானலிங்கம் மயூரன், சிவலோகநாதன் வித்யாவின் கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தின் முக்கிய சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் எனப்படும் சுவிஸ் குமாரை விடுவிப்பதில் முன்னாள் அமைச்சர் விஜயகலா நேரடியாக ஈடுபட்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தனுக்கும் குறித்த அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2011ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தான் உள்ளிட்ட 5 பேர் 10 வருட சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமை, விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாகவே என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த இருவரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: