186 விளையாட்டுப் பயிற்றுநர்கள் அடுத்தவாரம் கடமைகளைப் பொறுப்பேற்பு!

Friday, June 22nd, 2018

வடக்கு மாகாண பாடசாலைகளில் முதன் முதலாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது –

வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்விவலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் தேவை இனங்காணப்பட்டது. தற்போது முதன் முறையாக பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கான் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் தேசிய மட்டம் மாகாண மட்டங்களில் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களில் இருந்து தேர்வுகள் இடம்பெற்று தற்போது தெரிவாகியோரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தற்போது வடக்கு மாகாணத்துக்கென 186 பேர் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் வாரம் கையளிக்கப்படவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் இரண்டாம் திகதி தங்களது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும். இந்த பயிற்றுவிப்பாளர்கள் தற்போது 1 ஏபி, 1 சீ தரப் பாடசாலைகளுக்கே நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.

Related posts: